இணைந்த நேர அட்டவணை செயற்பாடுகளுக்கு இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலையினர் ஒத்துழைக்கவில்லை – வவுனியா தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் குற்றச்சாட்டு!

Monday, September 21st, 2020

வவுனியாவில் இணைந்த நேர அட்டவணையில் பொதுமக்களிற்கான போக்குவரத்து சேவையினை மேற்கொள்வதற்கு இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலையினர் ஒத்துழைக்கவில்லை என வவுனியா தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் குற்றம் சாட்டியுள்ளார்.

வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் வடமாகாண ஆளுநர் திருமதி சாள்ஸ் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் ஆகியோரின் இணைத்தலைமையில் இன்று இடம்பெற்றது.

இதன்போது கருத்துத் தெரிவித்த தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் –

வடக்கின் நாலுமாவட்டங்களிலும் நடைமுறையில் உள்ள இணைந்த நேர அட்டவணை செயற்பாடு வவுனியாவில் மாத்திரம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதனால் பேருந்துகளிற்கிடையில் போட்டித்தன்மை ஏற்பட்டு மாணவர்கள் மற்றும் பொதுமக்களிற்கான சரியான சேவையினை வழங்க முடியாதுள்ளது.

200 மில்லியன் ரூபாய் செலவழித்து அனைத்து வசதிகளுடனும், அமைக்கப்பட்ட பேருந்துநிலையம் இருக்கும் போது அதன் வாசலில் தரித்து நின்று பேருந்துகள் சேவையில் ஈடுபடுகின்றன.

இது தொடர்பில் சரியான தீர்மானம் ஒன்றினை பெறுவதற்கு போக்குவரத்து சபையினர் ஒத்துழைக்கவில்லை, உடனே வேலை நிறுத்தம் செய்கின்றனர். இவ்விடயம் தொடர்பாக பல தரப்புகளுடன் கூட்டங்கள் நடத்தப்பட்டும் உரிய தீர்வினை பெறமுடியாதுள்ளதாக அவர் தெரிவித்தார்.

வடக்கில் நான்குமாவட்டங்களிலும் நடைமுறையில் உள்ள இணைந்த நேர அட்டவணை வவுனியாவில் மாத்திரம் நடைமுறைப்படுத்தமுடியாமல் இருப்பது தொடர்பாக இணைத்தலைவர்கள் கடும் விசனம் தெரிவித்திருந்ததுடன், அதனை நடைமுறைப்படுத்துவதற்கு அரச அதிபர் நடவடிக்கை எடுப்பதுடன், பொலிசாரின் ஒத்துழைப்பையும் பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்துள்ளனர்.

இதேவேளை குறித்த விடயம் தொடர்பாக பதிலளிப்பதற்கு இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலையின் எந்த ஒரு அதிகாரிகளும் கூட்டத்தில் கலந்துகொண்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: