இணக்கப்பாடு இன்றி கலந்துரையாடல் நிறைவு – புகையிரத நிலைய அதிபர்களின் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்கிறது!

Monday, December 27th, 2021

போக்குவரத்து அமைச்சின் செயலாளர் மற்றும் புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்திற்கும் இடையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடல் இணக்கப்பாடு இன்றிய நிலையில் முடிவடைந்துள்ளது. இதனால் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது.

இதேவேளை காலவரையறையற்ற பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தை முன்னெடுப்பது தொடர்பான தீர்மானத்தை எட்டுவதற்கு இன்று மாலை செயற்குழு கூடும் என இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.

ரயில்வே பொது முகாமையாளரின் கோரிக்கைகளுக்கு சாதகமான பதிலை வழங்கத் தவறியதாகவும், உண்மைகளை முன்வைக்க அவர்களுக்கு வாய்ப்பளிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று நள்ளிரவில் ஆரம்பிக்கப்படவிருந்த வேலை நிறுத்தப் போராட்டம் அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் பலனாக ஒத்திவைக்கப்பட்டது.

எவ்வாறாயினும், புகையிரத பயணச்சீட்டு வழங்குவதை இடைநிறுத்துவது மற்றும் பொதிகளை ஏற்று கொண்டு செல்வதைத் தவிர்ப்பது போன்ற தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்தது.

புகையிரத நிலைய அதிபர்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கையில் அரசியல் உள்நோக்கம் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: