ஆறு மாதங்களுக்குத் தேவையான அரிசி கையிருப்பில் உள்ளது – விவசாயத்துறை அமைச்சர் அறிவிப்பு!

Friday, July 2nd, 2021

அடுத்த 6 மாதங்களுக்குத் தேவையான அரிசி, கையிருப்பில் உள்ளது. எனவே, நாட்டில் அரிசிக்குத் தட்டுப்பாடு எதுவும் ஏற்படாது என தெரிவித்துள்ள விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்பவர்களுக்கு எதிராக தளர்வுப் போக்குக்கு இடமே இல்லாது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுயைில் –

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம்முதல் அடுத்த ஆறு மாதங்களுக்கு நாட்டுக்குத் தேவையான அரிசி கையிருப்பில் உள்ளதால் அரிசி தட்டுப்பாடு ஏற்படும்என்ற பேச்சுக்கே இடமில்லை.

விவசாயிகளிடமிருந்து இம்முறை நாட்டு அரிசி நெல் ஒரு கிலோ 50 ரூபாவுக்கும், சம்பா அரிசி நெல் 52 ரூபாவுக்கும், பச்சை நெல் 44 ரூபாவுக்கும் கொள்வனவு செய்யப்படும். குறித்த விலைகளே நிர்ணயிக்கப்பட்டன.

நெல் சந்தைப்படுத்தும் சபை ஊடாக நெல் கொள்வனவு செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டள்ளது. ஏனைய காலப்பகுதி போல் தாமதம் ஏற்படாது விவசாயிகளுக்கு உடன் பணம் வழங்குவதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.

சம்பா மற்றும் கெகுலு அரிசி ஒரு கிலோவை 98 ரூபாவுக்கும், நாட்டரிசி ஒரு கிலோ 96 ரூபாவுக்கும் விற்பனை செய்ய முடியும் என வர்த்தகத்துறை அமைச்சர் விலை நிர்ணயித்துள்ளார்.

அதனால்தான் ஒரு கிலோ நெல்லுக்கு 50 ரூபாவை நிர்ணயித்துள்ளோம். வர்த்தமானி வெளியிடப்பட்டாலும் அது நடைமுறைக்கு வருவதில்லை என்ற குற்றச்சாட்டு அரசுக்கு எதிராக உள்ளது.

எனவே, இம்முறை சட்டம் கடுமையாக செயற்படுத்தப்படும் என்பதுடன் அதிக விலைக்கு இனி அரிசி விற்க முடியாது என்பதுடன் ஒரு இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் சேதனப் பசளை மூலம் விவசாயம் என்ற முடிவிலிருந்து அரசு மாறாது என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: