ஆயிரம் ரூபா வழங்காத பெருந்தோட்ட நிறுவனங்கள் தொடர்பில் ஆராய விசேட குழு – தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவிப்பு!

Sunday, December 19th, 2021

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்தம் ஆயிரம் ரூபா வேதனம் வழங்காத பெருந்தோட்ட நிறுவனங்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகளை ஆராய்வதற்காக விசேட ஆணையாளர் தலைமையிலான குழு ஒன்று நியமிக்கப்படவுள்ளதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த அவர், பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்காக சட்ட ரீதியான தரவுகள் சேகரிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பெருந்தோட்ட மக்களுக்கு நாளாந்த ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதற்கு எதிராக பெருந்தோட்ட நிறுவனங்கள் மேன்முறையீடு செய்து வழக்கு தாக்கல் செய்துள்ளன.

எவ்வாறாயினும் ஆயிரம் ரூபா வேதனம் வழங்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு நீதிமன்றினால் இதுவரையில் தடைவிதிக்கப்படவில்லை. இவ்வாறான பின்னணியில் சில பெருந்தோட்ட நிறுவனங்கள் நாளாந்தம் ஆயிரம் வேதனம் வழங்குவதில் இருந்து விலகியுள்ளதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். ஆனாலும் 90 சதவீதமான இடங்களில் நாளாந்தம் ஆயிரம் ரூபா வேதனம் வழங்கப்படுகின்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

Related posts: