ஆசிரியைகளின் மாற்று ஆடை கோரிக்கைக்கு மகா சங்கத்தினர் மற்றும் பழைய மாணவர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு – அனுமதி வழங்கப்படாது என கல்வி அமைச்சர் அறிவிப்பு!

Friday, November 4th, 2022

ஆசிரியைகளுக்கு புடவை அல்லது சாறிக்குப் பதிலாக வேறு வசதியான ஆடையை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு மகா சங்கத்தினர் மற்றும் பழைய மாணவர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

ஆசிரியர்களுக்கு புடவைக்குப் பதிலாக வேறு ஆடைகளை பரிந்துரைக்க வேண்டாம் எனவும் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்தவிடம் மகாசங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பில்  பதிலளித்த கல்வி அமைச்சர், ஆடையை மாற்றும் எண்ணம் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

முன்பதாக தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு புடவைக்குப் பதிலாக வேறு வசதியான ஆடையை அறிமுகப்படுத்துமாறு கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் செனவிரத்னவிடம் இலங்கை ஆசிரியர் சங்கம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்திருந்தது.

போக்குவரத்து பிரச்சனைகள் காரணமாக அதிகளவான பெண் ஆசிரியர்கள் மோட்டார் சைக்கிளில் பாடசாலைக்கு வருவதாகவும் தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக புடவைகளுக்கு கணிசமான செலவுகளைச் செய்ய வேண்டியுள்ளதாகவும் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

மோட்டார் சைக்கிள்களில் பயணிக்கும் போது புடவைக்குப் பதிலாக வசதியான ஆடைகளை அணிவது மிகவும் பொருத்தமானது எனவும் சங்கம் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையிலேயே ஆசிரியைகளுக்கு புடவை அல்லது சாறிக்குப் பதிலாக வேறு வசதியான ஆடையை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு மகா சங்கத்தினர் மற்றும் பழைய மாணவர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: