ஆசிய நாடுகளுக்கான நல்லெண்ண தூதுவராக அமிதாப் பச்சன் நியமனம்!

Wednesday, May 17th, 2017

தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான ஹெபடைடிஸ் நோய் தடுப்பு தொடர்பான உலக சுகாதார அமைப்பின் நல்லெண்ண தூதுவராக பிரபல ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஹெபடைடிஸ் நோய் தடுப்பு தொடர்பான தூதுவராக நியமிக்கப்பட்ட நடிகர் அமிதாப் பச்சன், நோய் தடுப்பு தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வேலைத்திட்டம் ஒன்றில் கலந்து கொள்ளவுள்ளார்.

ஹெபடைடிஸ் பீ வைரஸ் தொற்றுடன் வாழும் அமிதாப் பச்சன், இலங்கை, இந்தியா உட்பட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஹெபடைடிஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தவுள்ளார்.

புதிய நியமனத்தின் மூலம் தென்கிழக்கு ஆசிய பிராந்திய நாடுகளில் ஹெபடைடிஸ் நோய் காரணமாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை மற்றும் நோயினால் ஏற்படும் பாதிப்புகளை குறைத்து கொள்ள எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவலை உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பிராந்திய வைத்திய பணிப்பாளரான வைத்தியர் புனம் கெத்ரஹல் சிங் தெரிவித்துள்ளார்.

புதிய நியமனம் வழங்கும் நிகழ்வு மும்பாய் நகரில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார். ஹெபடைடிஸ் சி என்பது ஒரு வைரஸ் தொற்றாகும். பொதுவாக கல்லீரலை தாக்கி நாள் பட்ட ஹெபடைடிஸை ஏற்படுத்துகிறது.

பெரும்பாலான மக்களுக்கு கல்லீரல் பாதிப்பு வழக்கமான மருத்துவ சோதனைகளின் போது தெரிய வருகின்றது .அதுவரை அவர்களுக்கு ஹெபடைடிஸ் சி தொற்று இருப்பது தெரிவதில்லை. ஆனால் இதுவே நாள்பட்ட கல்லீரல் இழைநார் வளர்ச்சி அல்லது கல்லீரல் புற்றுநோய் உருவாக காரணமாக அமைகிறது. ஹெபடைடிஸ் நோய் காரணமாக வருடாந்தம் ஆசிய பிராந்தியத்தில் 410,000 பேர் உயிரிழக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: