ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் வடக்கில் நிலையான கடற்றொழில் அபிவிருத்தி!

Wednesday, August 3rd, 2016

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி ஒதுக்கீட்டில் நிலையான கடற்றொழில் அபிவிருத்தி வேலைத்திட்டம் வடக்கில் முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் குழுத்தலைவர் கிறட் கலிஸ்பெரி தெரிவித்துள்ளார்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் குழுத்தலைவர் கிறட் கலிஸ்பெரி உள்ளிட்ட மூவர் அடங்கிய குழுவினர் நேற்று யாழ் மாவட்ட செயலகத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.
நேற்று யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கடற்றொழில் அபிவிருத்திகள் தொடர்பான கலந்துரையாடலில் இவர்கள் கலந்துகொண்டனர்.

யாழ் மாவட்டத்தில் 15 பிரதேச செயலகங்களின் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதார செயற்பாடுகள், கடற்றொழிலாளர்களின் உட்கட்டுமான பணிகள் தொடர்பிலும் இக் குழுவினர்கள் இங்கு கவனம் செலுத்தினர்..

வடக்கின் மீன்பிடி அபிவிருத்திக்காக 320 மீனவக் கிராமங்களை அபிவிருத்தி செய்ய ஆசிய அபிவிருத்தி வங்கி 65 மில்லியன் டொலர் நிதியுதவி வழங்க இணக்கம் தெரிவித்துள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.  வடக்கின் கடற்றொழில் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வடக்கின் முக்கோண வலயமாக யாழ் மாவட்டத்தினை அபிவிருத்தி செய்யும் நோக்குடன் இச் செயற்பாட்டினை ஆசிய அபிவிருத்தி வங்கியினர் முன்னெடுத்துள்ளனர்.

கடற்றொழில் கிராமங்களின் இறங்கு துறைகளுக்கான கப்பல் நிறுத்துமிடம், வெளிச்ச வீடுகள், கடற்றொழிலுக்கு செல்லும் கடற்கரையோர வீதிப் புனரமைப்பு, மீனவக் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள், மீனவ கிராமங்களுக்கான அபிவிருத்திகள் என்று பல்வேறு விடயங்கள் தொடர்பில் அறிக்கை தயாரிக்கப்பட்டு, ஒக்டோபர் மாதத்தின் பின்னர் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றார்.

Related posts: