அவசர அழைப்பு இலக்கத்தை அநாவசியமாக பயன்படுத்த வேண்டாம் – பொதுமக்களிடம் பொலிஸ் ஊடகப் பெச்சாளர் வலியுறுத்து!

Thursday, April 22nd, 2021

நாட்டில் அன்றாடம் இடம்பெறும் திடீர் விபத்துகள், அனர்த்தங்கள், பாரிய குற்றச்செயல்கள் தொடர்பில் துரிதமாக காவல்துறையினருக்கு அறிவிப்பதற்கு 2004 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவு எனப்படும் 119 துரித அழைப்பு சேவையை சிலர் அநாவசியமான முறையில் பயன்படுத்துவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் – 119 அவசர அழைப்புப் பிரிவுக்கு கிடைக்கும் முறைப்பாடுகள் தொடர்பில் விரிவான ஆய்வினை மேற்கொண்டதன் பின்னர் இந்த நிலைமை கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய, பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவுக்கு 2020 ஆம் ஆண்டில் 12 இலட்சத்து 32 ஆயிரத்துது 272 அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த புள்ளிவிபரங்களின் படி நாளொன்றுக்கு 3000 க்கும் அதிகமான அழைப்புகள் கிடைக்கப் பெற்றுள்ளமை தெரியவருகிறது.

அத்துடன் பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவுக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொள்ள நாளொன்றில் 8000 க்கும் அதிகமானோர் முயற்சிப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்த ஆய்வுக்கமைய, அவசர அழைப்புப் பிரிவுக்கு கிடைக்கப்பெறும் அழைப்புகளில் 93 சதவீதமானவை தேவையற்ற விடயங்களுக்காக மேற்கொள்ளப்படும் அழைப்பு என தெரியவந்துள்ளது.

இத்தகைய செயற்பாடுகள் பொலிஸ் அவசர பிரிவினரின் பணிகளுக்கும் இடையூறாக உள்ளது. எனவே, திடீர் விபத்துகள், அனர்த்தங்கள், பாரிய குற்றச்செயல்கள் என்பன தொடர்பில் அறிவிப்பதற்காக மாத்திரம் 119 அவசர அழைப்பு இலக்கத்தை பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரியுள்ளதுடன் இவ்விடயங்களை தவிர காணி தகராறு, உடன்படிக்கை குளறுபடிகள், காசோலை மோசடிகள் போன்ற சம்பவங்கள் தொடர்பில் 119 க்கு அறிவிப்பதால் எவ்வித பயனையும் பெற்றுக்கொள்ள முடியாது எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: