அரிசி மற்றும் வெங்காயத்துக்கான விசேட பண்டவரி குறைக்கப்பட்டது – ஜனாதிபதியின் கையொப்பத்துடன் வர்த்தமானி அறிவித்தலும் வெளியானது!

Thursday, March 28th, 2024

அரிசி மற்றும் வெங்காயத்துக்கான விசேட பண்டவரி குறைக்கப்பட்டுள்ளதுடன் அதற்கான வர்த்தமானி அறிவித்தல், ஜனாதிபதியின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, இளஞ்சிவப்பு நிறத்திலான பெரிய வெங்காயத்திற்கு விதிக்கப்பட்டிருந்த வரி, 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இளஞ்சிவப்பு நிறத்திலான பெரிய வெங்காயம் கிலோவொன்றுக்கான வரி 70 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

தற்போது இந்தியாவும் பாகிஸ்தானும் பெரிய வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளன. இந்த நிலையில், இந்தியாவில் இருந்து இளஞ்சிவப்பு நிறத்திலான பெரிய வெங்காயத்தை மாத்திரமே இறக்குமதி செய்ய முடியும் என இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அதன்படி, சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ள பின்னணியில், இளஞ்சிவப்பு நிறத்திலான பெரிய வெங்காயத்திற்கு விதிக்கப்பட்டிருந்த பண்டவரியை குறைக்க நிதியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

குறித்த வரி மானியம் அடுத்த மாதம் 30 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இறக்குமதி செய்யப்படும் ஒருகிலோகிராம் அரிசிக்காக விதிக்கப்பட்டிருந்த 65 ரூபாய் என்ற விசேட பண்டவரி ஒரு ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 21 ஆம் திகதிக்குள் இறக்குமதி கட்டுப்பாட்டு அனுமதி பத்திரத்தை பெற்ற எந்தவொரு அரிசி இறக்குமதியாளருக்கும் இந்த வரி திருத்தம் பொருந்தும் என நிதியமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: