அரச ஊழியர்களுக்கான எந்த விதமான சலுகைகளும் வழங்கப்பட மாட்டாது – ஜனாதிபதி தெரிவிப்பு!

Tuesday, November 22nd, 2022

அடுத்த வருடம் முதல் அரச ஊழியர்களுக்கான எந்த விதமான சலுகைகளும் வழங்கப்பட மாட்டாது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதனை யாழ் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அகிலன் கதிர்காமர் பத்திரிகை ஒன்றுக்கான நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்டம் ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் அது குறித்து தொடர்ந்தும் விபரித்துள்ள விரிவுரையாளர் அகிலன் கதிர்காமர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

இந்த வரவு செலவுத் திட்டம் ஒரு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் கொண்டுவரப்பட்டிருக்கிறது. சுதந்திரம் கிடைத்த வரலாற்றிலேயே ஒரு மிக மோசமான நிலைமை மற்றும் சுமார் நூறு வருடங்களுக்கு ஒருமுறை வருகின்ற ஒரு நெருக்கடி நிலைமையில் முன்வைக்கப்பட்டிருக்கிறது.

இந்த வருடம் எமது மொத்த தேசிய உற்பத்தி கிட்டத்தட்ட 10 வீதத்தால் சுருங்கப்போகிறது. இந்நிலையில் இந்த வரவு செலவுத் திட்டம் பொருளாதார நெருக்கடியை சீர் செய்யுமா என்பது தொடர்பான ஒரு எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

ஆனால் இந்த வரவு செலவுத் திட்டத்தில் பாரிய பொருளாதார நெருக்கடிக்கான தீர்வுகள் இல்லை என்றுதான் கூறவேண்டும்.

எனவே 2023ஆம் வருடத்திலும் ஒரு நெருக்கடி நிலைமையே நாட்டில் காணப்படும். என்னைப் பொறுத்தவரையில் பொருளாதார நெருக்கடி அடுத்த வருடத்தில் இதனை விட அதிகரிக்கும் என்பதே மதிப்பீடாக இருக்கிறது.

எமது மொத்த தேசிய உற்பத்தி 8 வீதத்தால் உயரவேண்டும் என்பதே ஜனாதிபதியின் அறிவிப்பாகவும் இருக்கிறது.

நாட்டில் சனத்தொகை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எனவே மக்களின் தேவைகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. அதனால் மொத்த தேசிய உற்பத்தி 5 விதத்திலாவது அதிகரிக்க வேண்டும்.

இங்கு அதற்கு மாறாக சுருங்கும் என்று கூறும்போது அது பெரும் பாதிப்பை பொருளாதார ரீதியில் நாட்டுக்கு ஏற்படுத்தும்.

ஒருவேளை அடுத்த வருடம் நடுப்பகுதியில் மற்றுமொரு வரவு செலவுத்திட்டத்தை கொண்டு வரும் நிலைகூட ஏற்படலாம்.

இந்த வரவு செலவுத் திட்டத்தில் காணப்படுகின்ற வருமானம் செலவினங்கள் மற்றும் ஏனைய விடயங்களை பார்க்கும்போது அது தெரிகிறது. சர்வதேச நாணய நிதியம் இரண்டு விடயங்களை முன்வைத்து இருக்கிறது.

அதாவது கடன் மீள்செலுத்துவதற்கான திட்டங்களை உருவாக்க வேண்டிய தேவை முன்வைக்கப்பட்டிருக்கிறது. அடுத்ததாக 2025 ஆம் ஆண்டு இலங்கையின் வரவு – செலவுத் திட்டத்தில் செலவானது வரவைவிட குறைவாக இருக்க வேண்டும் என்ற விடயம் முன்வைக்கப்பட்டுள்ளது. இதன்படி இதனை ஒரு சிக்கனமான வரவு செலவுத் திட்டமாக கூற முடியும்.

குறிப்பாக, அரச ஊழியர்களுக்கு எவ்வித சலுகையும் இல்லை என்று கூட ஜனாதிபதி அறிவித்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.

Related posts: