அரச அச்சக திணைக்களத்தினால் அகற்றப்பட்ட கடதாசி விற்பனையில் பாரிய முறைகேடு – விசாரணைக்கு அமைச்சர் டலஸ் அழகப்பெரும உத்தரவு!

Tuesday, January 25th, 2022

வெகுஜன ஊடகத்துறை அமைச்சுக்கு உட்பட்ட அரசாங்க அச்சகத்தில், அகற்றப்பட்ட கடதாசி விற்பனையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து ஆராய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெஜன ஊடக அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் அரசாங்க அச்சகத் திணைக்களத்தின் மூலம் தினமும் சுமார் 2,500 டொன் கடதாசி கழிவாக அகற்றப்படுகின்றது.

இவற்றுக்கான விற்பனையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடு தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், தொழிற்சங்கங்களுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வரும் தற்போதைய சூழ்நிலையில்  இவ்விடயத்தில் தலையிட்டமைக்காக அரசாங்க அச்சக தொழிற்சங்கத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறியிருந்தார்.

மேலும், இச்சம்பவம் தொடர்பில் அச்சக திணைக்களத்தின் உள்ளக கணக்காய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தெமட்டகொட பொலிஸாரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சும் தனித்தனியாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது. அத்துடன், சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய தண்டனையை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்;வெஜன ஊடக அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான டலஸ் அழகப்பெரும மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: