அரசாங்கத்தை விமர்சிப்பது மக்களின் உரிமை – எதிர்ப்பு நடவடிக்கையின் போது சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு!

Saturday, April 2nd, 2022

எதிர்ப்பு நடவடிக்கையின்போது, சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தால், சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரகேசர தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்த அவர் அமைதியான முறையில் எதிர்ப்பில் ஈடுபட எந்தத் தடையும் இல்லை என்று குறிப்பிட்டார்.

3ஆம் திகதி போராட்டத்திற்காக அனைத்து மக்களும் வீதிக்கு இறங்குமாறு கூறப்பட்டுள்ளது. போராட்டம் நடத்துவது, பேரணியில் ஈடுபடுவது, அரசாங்கத்தை விமர்சிப்பது என்பது மக்களின் உரிமையாகும். அந்த உரிமை பறிக்கப்படவில்லை. பறிக்கப்படவும் மாட்டாது.

3 ஆம் திகதி வீதிக்கு இறங்குபவர்கள், அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் எனத் தாம் கூறுவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரகேசர தெரிவித்துள்ளார்.

ஆனால், நாட்டின் சொத்துக்கள், அரச மற்றும் தனியார் சொத்துக்கள், வர்த்தக நிலையங்கள் என்பனவற்றுக்கு பாதிப்பு ஏற்படுத்த முயற்சித்தால், காவல்துறை கடுமையான நடவடிக்கைக்கு எடுக்கும் என காவல்துறைக்கு பொறுப்பான அமைச்சர் என்ற அடிப்படையில் தாம் கூறுவதாக தெரிவித்துள்ளார்.

அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு இதுவரையில் எவ்வித இடையூறையும் ஏற்படுத்தவில்லை.

ஆனால், மிரிஹானவில் 39 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், காணொளி காட்சிகள் மூலம், குறித்த சம்பவம் தொடர்பில், விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரகேசர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கையர்களுக்கு அமைதியாக போராடுவதற்கான உரிமை உள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங் தெரிவித்துள்ளார்.

அது ஜனநாயக வெளிப்பாட்டுக்கு அத்தியாவசியமானது என ட்விட்டர் பதிவொன்றில் குறிப்பிட்டுள்ள அவர், இலங்கையின் நிலைமைகளை தாம் உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: