அமைச்சரவைத் தீர்மானத்தினை உடனடியாகச் செயற்படுத்துமாறு வலியுறுத்தி யாழில் கையெழுத்துப் போராட்டம்!
Thursday, September 29th, 2016
கடந்த-2015 பெப்ரவரி- 11 ஆம் திகதி அம்பாறை மாவட்டத்தின் பாணம பிரதேசத்திலுள்ள காணிகளை விடுவித்து மக்களுக்கு அவற்றை மீண்டும் பெற்றுக்கொடுப்பதற்காக எடுக்கப்பட்ட வரலாற்று ரீதியான அமைச்சரவைத் தீர்மானத்தினை உடனடியாகச் செயற்படுத்துமாறு வலியுறுத்திக் கையெழுத்துப் போராட்டமொன்று இன்று வியாழக்கிழமை (29) முற்பகல்-10.30 மணி முதல் யாழ் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றது.
யாழ். மாவட்டத் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் பொதுமக்களிடமிருந்து கையெழுத்துப்பெ றும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
யாழ் மாவட்ட தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் தலைவர் த.இன்பம் தலைமையில் நடைபெற்ற இந்தக் கையெழுத்துப் போராட்டத்தில் ‘அம்பாறை மாவட்டத்தின் பாணமப் பிரதேசத்தில் மக்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட காணி உரிமைக்கு நீதியை நிலைநிறுத்துங்கள்’, ‘காணிகளின் ஆரம்பக் குடியிருப்பாளர்களுக்கு அவர்களது காணி உரிமையை மீண்டும் பெற்றுக் கொடுங்கள்!’, ‘மீளக் குடியமர்த்துவதற்குத் தேவையான வீடுகள் உள்ளிட்ட சகல வசதிகளையும் பெற்றுக் கொடுங்கள்’ போன்ற விடயங்கள் பிரதானமாக வலியுறுத்தப்பட்டுள்ளன. பொதுமக்களுக்குத் தெளிவை ஏற்படுத்தும் வகையிலான துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.
கையெழுத்துப் பெறும் நடவடிக்கைகள் நிறைவு பெற்றவுடன் பெறப்பட்ட கையெழுத்துகள் ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பி வைக்கப்படும் என யாழ். மாவட்டத் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் செயற்பாட்டாளர் த.இன்பம் தெரிவித்தார்.
Related posts:
|
|