அபிவிருத்தியை பெற மத்திய அரசுடன் இணைந்து செயற்பட வேண்டும்! – வடக்கு ஆளுநர்

Friday, May 6th, 2016
அபிவிருத்தி தேவையென்றால் மத்திய அரசாங்கமும் வட மாகாண சபையும் ஒற்றுமையாக இணைந்து செயற்பட வேண்டும் என வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

விஸ்வமடு சிவில் பாதுகாப்பு தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற வட மாகாண ஆளுனரை கௌரவிக்கும் நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் .

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டில் நிலவிய யுத்தம் முடிவடைதுள்ளது. இரண்டு பக்கங்களிலும் இழப்புக்கள் இருந்தன. அவை அனைத்தையும் மறந்து எமது நாட்டினை அபிவிருத்தி பாதையை நோக்கி கொண்டு செல்ல வேண்டும். அபிவிருத்தியை நோக்கி செல்ல வேண்டுமென்றால் நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் அரசாங்கமும் வட மாகாண சபை உறுப்பினர்களும் ஒற்றுமையாக சேர்ந்து வேலை செய்ய வேண்டும். நாம் வணங்கும் தெய்வங்களான

புத்தராக இருக்கட்டும் விஷ்ணுவாக இருக்கட்டும், அவர்களே ஒரே ஆலயத்தில் ஒற்றுமையாக இருக்கும் போது வணங்கச் செல்லும் நாம் மட்டும் ஏன் சண்டை பிடிக்க வேண்டும். இனிமேல் எங்களுக்கெல்லாம் யுத்தம் வேண்டாம் என தெரிவித்தார்.

நீங்கள் ஒருதாய் பிள்ளை போல் வேலை செய்தால் நாட்டை கட்டியெழுப்ப முடியும். அனைவரும் சிங்களம், தமிழ், முஸ்லிம் என்ற பாகுபாடின்றி அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டுமென்பதே எனது விருப்பம். அதற்காகவே நானும் பாடுபடுகிறேன் என தெரிவித்தார்

இன்று 2.00 மணியளவில் ஆரம்பியமாகிய நிகழ்வில் நடன மற்றும் மங்கள வாத்தியங்களுடன் வட மாகாண ஆளுநர் அழைத்து வரப்பட்டதைத் தொடர்ந்து சிறப்புரைகளும் கலை நிகழ்வுகளும் நடைபெற்றது.

நிகழ்வின் இறுதியில் சிவில் பாதுகாப்பு படை உத்தியோகத்தர்களின் பிரச்சனைகள் தொடர்பாக அவர்களுடன் கலந்துரையாடியதுடன், தர்மபுரம் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி M.M.D.N. சத்துரங்க தர்மபுரம் பொலிஸ் பிரிவு மற்றும் மக்கள் தொடர்பாகவும் கலந்துரையாடினார்.

Related posts: