அபாய நிலையில் இல்லாத கொரோனா நோயாளர்களுக்கு திங்கள்முதல் வீட்டு தனிமைப்படுத்தல் முறைமையில் சிகிச்சை – இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன அறிவிப்பு!

Friday, August 6th, 2021

நோய் அறிகுறிகளற்ற, அபாய நிலையில் இல்லாத கொரோனா நோயாளர்களை வீடுகளிலேயே தனிமைப்படுத்தும் நடவடிக்கையை எதிர்வரும் திங்கட்கிழமைமுதல் ஆரம்பிக்கவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் மருத்துவ கண்காணிப்பின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

அத்துடன் மேல் மாகாணத்தில் ஏற்கனவே இந்த திட்டம் நடைமுறையில் உள்ளதுடன், நாடளாவிய ரீதியில் எதிர்வரும் திங்கட்கிழமைமுதல் அது அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன வீட்டில் உள்ள நோயாளர்களுடன் தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு ஆலோசனை வழங்கும் வகையிலான திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

வீட்டு தனிமைப்படுத்தல் தொடர்பான சுகாதார வழிகாட்டல் கோவை, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

வைத்தியசாலைகளில் நிலவும் நெருக்கடி காரணமாக, வீட்டு தனிமைப்படுத்தல் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.

டெல்டா பிறழ்வு சடுதியாக பரவும் நிலையில், வைத்தியசாலைகளில் உள்ள கட்டில்களுக்கு மேலதிகமாக நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

கொழும்பில் பதிவாகியுள்ளவர்களில் பெரும்பாலானோருக்கு டெல்டா பிறழ்வு ஏற்பட்டுள்ளமை, ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட ஒவ்வாமை, நிர்ப்பீடனம், உயிரணு தொடர்பான பிரிவு எழுமாறாக மாதிரிகளைத் தெரிவு செய்து முன்னெடுத்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது,

000

Related posts: