அனைவரது ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறேன் – யாழ். பல்கலை புதிய துணைவேந்தர் கோரிக்கை!

Friday, August 28th, 2020

பொறுப்புணர்வுடன் எனது கடமைகளைச் செய்வதற்கு அனைவரும் ஒத்துழையுங்கள் என புதிதாக பதவியேற்றுள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் ஸ்ரீ சற்குணராசா கோரிக்கை விடுத்துள்ளார்.

தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக இன்று வெள்ளிக்கிழமை பொறுப்பேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும்  அவர் கூறுகையில், “இதுவொரு பொதுவான நிறுவனம். மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டிய பதவியை எனக்கு கொடுத்திருக்கிறார்கள். தற்போதைய நிலைமையில் உலகத்திலே என்றுமில்லாத வகையில் விமான நிலையங்கள் கூட மூடப்பட்டுள்ள நிலை காணப்படுகின்றது.

அப்படியான சூழ்நிலையில் பல்கலைக்கழகத்தினை நிலைநிறுத்துவது என்பது சவாலான விடயம். எனவே குழுவாக இணைந்து இதனை செயற்படுத்தவுள்ளேன். அத்துடன் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இரண்டாயிரம் ஊழியர்கள் கடமையாற்றுகிறனர் என்பதுடன் 11 ஆயிரம் மாணவர்கள் கல்வி கற்கிறார்கள். இது பெரிய குழுவாகும்.

இங்கு கடமையாற்றும் ஊழியர்கள் இந்தப் பல்கலைக் கழகத்தை நேசித்து செயற்படுகின்றார்கள். இந்தப் பல்கலைக்கழகம் எமது மக்களுடைய ஒரு சொத்தாகும் என தெரிவித்த புதிய துணைவேந்தர் ஊடகங்கள் உரிய முறையில் செயற்பட வேண்டும் என்றும் கோரியதுடன்  கருத்து முரண்பாடுகள் பல்கலைக்கழகத்தில் வரவேற்கப்படும். இதுவே கல்வி நடவடிக்கையில் ஒரு முக்கியமான விடயம். அனைத்து விடயங்களும் கலந்தாலோசிக்கப்பட்டு நிறுவனத்தை முன்னிறுத்தி முடிவுகள் எடுக்கப்படும். தனிப்பட்ட ரீதியில் எந்த முடிவும் எடுக்கப்படாது. ஒரு நிறுவனம் சார்ந்து முடிவுகள் எடுக்கப்படும்” என்று தெரிவித்தள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: