அத்துமீறும் இந்திய இழுவைப் படகை தடுத்து நிறுத்த வலியுறுத்தி இந்திய துணைத் தூதரகம் முன்பாக கடற்றொழிலாளர்கள் போராட்டம்!

Tuesday, June 18th, 2024

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறும் இந்திய இழுவைப் படகை தடுத்து நிறுத்த வலியுறுத்தி இந்திய துணைத் தூதரகம் முன்பாக  கடற்றொழிலாளர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.

இந்திய அரசே எமது கடல் வளத்தினை சூறையாடாதே எம்மையும் வாழவிடுங்கள் என கோரி யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இன்று(18) காலை இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் சென் பொஸ்கோ பாடசாலைக்கு அருகாமையிலுள்ள மருதடிச் சந்தியில் இருந்து துணைத் தூதரகம் வரை பேரணியாகச்  செல்ல முயன்றபோது பொலிஸார் தடுப்பு வேலிகளை அமைத்து முன்னேறவிடாது போராட்டகாரர்களை மறித்தனர். இருந்தபோதும் நிபந்தனையுடன் முன்னோக்கி செல்ல பொலிஸார் அனுமதித்தனர்.

இதையடுத்து மீனவர்கள் துணைத்தூதரகம் முன்பாக கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது இலங்கை கடற்படையே நிறுத்து நிறுத்து அத்துமீறலை தடுத்து நிறுத்து, கடற்தொழில் அமைச்சர் கண்ணை திறந்துபார், இந்திய அரசே எம்மையும் வாழ விடு, சிறிலங்கா காவல்துறையே எங்களை தடுக்காதே உள்ளிட்ட பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதனைத்தொடர்ந்து தஙகளது கோரிக்கைள் அடங்கிய மகஜரொன்றை ஏழு மீனவர் சங்கப் பிரதிகள் துணைத்தூதரிடம் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: