அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பதற்கான விசேட வேலைத்திட்டம் – விசேட இணையத்தள முகவரிகள் அறிமுகம் !

Sunday, May 30th, 2021

நடமாட்ட கட்டுப்பாடு அமுலிலுள்ள காலப்பகுதியில் பொது மக்களுக்கான அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பதற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் சிறப்பு அங்காடிகள், ச.தொ.ச மற்றும் ஏனைய நிறுவனங்களால் இணையத்தளம் ஊடாக பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

நடமாட்ட கட்டுப்பாடுகள் அமுலாகியுள்ள காலப்பகுதியில், மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ள அதேவேளை அரச ஒளடத கூட்டுத்தாபனத்தின் இணையத்தளம் ஊடாக வீடுகளுக்கே மருந்துகளை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக மாவட்ட ரீதியில் அதற்கான தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவற்றை www.spc.lk  என்ற இணையத்தளம் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த தொலைபேசி இலக்கத்திற்கு, வட்ஸ்சப் ஊடாக மருந்துகள் தொடர்பான தகவல்களை அனுப்பியதும், அரச ஒளடத கூட்டுத்தாபனம், குறுந்தகவலை அனுப்பியவருக்கு அழைப்பை மேற்கொண்டு மருந்து தேவையினை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ச.தொ.ச ஊடாக நாளை 31 ஆம் திகதிமுதல் அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி 1998 என்ற துரித இலக்கத்திற்கு அழைத்து அல்லது www.sathosa.lk  என்ற இணையத்தளத்திற்கு பிரவேசித்து தேவையான பொருட்களை முன்பதிவு செய்து கொள்ள முடியும்.

இதேவேளை, நடமாட்ட கட்டுப்பாடுகள் அமுலாகியுள்ள காலப்பகுதியில் அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்கும் நடமாட்ட சேவை உரியமுறையில் இடம்பெறாவிடின், 1965 என்ற துரித தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து தகவல் வழங்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: