அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய 1000 ரூபா பொதி மே 2 முதல் வழங்க ஏற்பாடு – வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன!

Saturday, May 1st, 2021

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய சதொச நிவாரண பொதி மே மாதம் 2 ஆம் திகதிமுதல் 1000 ரூபாய் விலைக்கு பெற்றுக் கொடுக்கப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த நிவாரண பொதியை விட இம்முறை நிவாரண பொதியில் ஒரு கிலோ சம்பா மற்றும் ஒரு கிலோ நாட்டரிசி மேலதிகமாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் ஒரு கிலோ கிராம் சம்பா அரிசி ஒரு கிலோ கிராம் நாட்டரிசி ஒரு கிலோ கிராம் மாவு ஒரு கிலோ கிராம் அவுஸ்திரேலியா சிகப்பு பருப்பு ஒரு கிலோ கிராம் வௌ்ளை சீனி 200 கிராம் நெத்தலி 50 மில்லிலீற்றர் திரவ கிருமிநாசினி போத்தல் முகக்கவசம் ஒன்று 100 கிராம் தேயிலை தூள் 50 கிராம் சோயா மீட் பெக்கெட் ஒன்று 100 கிராம் துண்டு மிளகாய் என்பன உள்ளடக்கப்பட்டுள்ளன.

அதன்படி, மே மாதம் 2 ஆம் திகதி தொடக்கம் இலங்கை பூராகவும் உள்ள சதொச விற்பனை நிலையங்களில் இந்த நிவாரணப் பொதியை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் நிவாரணப் பொதியை பெற்றுக் கொள்ளும் நபர்களுக்கு 5 ரூபாய் விலைக்கழிவில் 400 கிராம் பால்மா பெக்கெட் ஒன்றினையும் பெற்றுக் கொள்ள முடியும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: