அதிகரித்துச் செல்லும் அறுவடை இயந்திரக் கூலி – திணறும் தென்மராட்சி விவசாயிகள்!
Friday, February 8th, 2019
தற்போது காலபோகச் செய்கை அறுவடை நடைபெறும் நிலையில் அறுவடை இயந்திரக்கூலி அதிகளவில் அறவிடப்படுகின்றது என்றும் இடத்துக்கு இடம் மாறுபடுகின்றது என்றும் தென்மராட்சி விவசாயிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இயற்கை இடர்களால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த அதிக அறவீடு தம்மைப் பெரிதும் பாதிக்கின்றது என்று கூறும் விவசாயிகள் இது பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்த கதையாக உள்ளது என்றும் கூறுகின்றனர்.
தென்மராட்சி தெற்கில் நெல் அறுவடை இயந்திரத்துக்கு பரப்பொன்றுக்கு 350 ரூபா வீதம் ஏக்கருக்கு 8 ஆயிரத்து 400 ரூபா அறிவிடுகின்றது. பூநகரியில் பரப்பொன்றுக்கு 250 ரூபா வீதம் ஏக்கருக்கு 6 ஆயிரம் ரூபா அறவிடப்படுகின்றது. தென்மராட்சி தெற்கில் ஆரம்பத்தில் 250 ரூபா முதல் 300 ரூபா வரை பரப்பொன்றுக்கு அறவிடப்பட்டபோதும் தற்போது அது 350 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று விவசாயிகள் தெரிவித்தனர்.
அறுவடைக்கூலி அதிகளவில் அறவிடப்படுவதால் தாம் பெரிதும் பாதிக்கப்படுகின்றோம் என்று தெரிவிக்கும் விவசாயிகள், அதிகாரிகள் இது தொடர்பாக ஏதாவது ஒரு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம் என்றும் தெரிவித்தனர்.
அதேவேளை ஈரத்தன்மையுள்ள நெல் மூடை ஒன்று ஆயிரத்து 900 ரூபாவாகவும் காய்ந்த நெல் மூடை ஒன்றும் 2 ஆயிரத்து 200 ரூபாவாகவுமே விற்பனை செய்யப்படுகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டது.
Related posts:
|
|
|


