ரஷ்யாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவுசெய்த ஜனாதிபதி !

Sunday, March 26th, 2017

60 வருடகாலமாக நிலவிவரும் இலங்கை – ரஷ்ய உறவுகளை மேலும் 100 ஆண்டுகளுக்கு முன்னெடுத்துச் செல்வதற்கான நட்புறவை மேம்படுத்தும் வகையிலான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ரஷ்ய விஜயம் நிறைவடைந்துள்ளது.

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று நாடு திரும்பினார். இலங்கையின் அபிவிருத்திக்கு பல்வேறு நன்மைகளை பெற்றுக்கொள்ள இந்த விஜயம் உதவியது.

43 ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கை அரச தலைவர் ஒருவருக்கு ரஷ்யாவிற்கான உத்தியோகபூர்வ அழைப்புக் கிடைத்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.ரஷ்ய ஜனாதிபதி விளாதிமிர் புட்டினின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மொஸ்கோ பயணமான ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவுக்கு உயர்ந்த மட்டத்திலான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இலங்கை – ரஷ்ய ஜனாதிபதிகளுக்கு இடையில் இரண்டு மணித்தியாலங்களுக்கு மேலாக இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் மூலம் இலங்கைக்கு பல்வேறு நன்மைகள் கிடைத்துள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ரஷ்ய பிரதமர் திமித்ரி மெத்வதொப் உடன் நடத்திய பேச்சுவார்த்தையும் வெற்றியளித்திருக்கிறது.

இருநாடுகளுக்கும் இடையிலான ராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 60 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டும் ஜனாதிபதியின் ரஷ்ய விஜயத்தை கௌரவிக்கும் வகையிலும் ஒழுங்கும் செய்யப்பட்டிருந்த நிகழ்வு ரஷ்யாவின் றிக்ஸ்கார்ல்ட்டன் ஹோட்டலில் இடம்பெற்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்

ரஷ்யாவில் வசிக்கும் இலங்கையர்கள் அங்கு கற்கும் மாணவர்கள் ஆகியோரையும் ஜனாதிபதி சந்தித்தார். அரசாங்கத்தின் எதிர்கால வேலைத்திட்டங்கள் பற்றியும் ஜனாதிபதி அவர்களுக்கு விளக்கமளித்தார். புதிய திட்டத்தின் கீழ் இலங்கையின் எதிர்கால எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கான ஒத்துழைப்பை வழங்குமாறு ஜனாதிபதி அவர்களைக் கேட்டுக் கொண்டார்.

Related posts: