அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரத்தை முழுமையாக ஸ்திரப்படுத்துவோம் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Friday, June 2nd, 2023

ஒரு வருடத்திற்கு முன்னர் இருந்த நிலைக்கு நாட்டை மீண்டும் இட்டுச்செல்ல எவரையும் அனுமதிக்கப்போவதில்லை என  சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  2048ஆம் ஆண்டு அபிவிருத்தி அடைந்த நாட்டை உருவாக்குவதே தமது போராட்டமாகும் என்றும் தெரிவித்துள்ளார்..

‘தேசிய நிலைமாற்றத்திற்கான திட்டவரைபடத்தை’ நாட்டுக்கு முன்வைத்து நேற்றிரவு ஆற்றிய விசேட உரையிலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

பாரம்பரிய அரசியலில் ஈடுபடும் சில குழுக்கள் பொருளாதார மறுமலர்ச்சியைத் தடுக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

பொருளாதார மறுசீரமைப்புக் குறித்து மக்களிடம் தவறான அச்சத்தை உருவாக்க முயற்சிக்கின்றன.

எப்போதும் கூறும் ‘நாட்டை விற்கப் போகின்றார்கள்’ என்ற கோஷத்துடன் தொடர்ந்தும் மக்களைத் தவறாக வழிநடத்த முயற்சிக்கின்றன. அரச செலவினங்களைக் குறைத்ததன் மூலம் அதிக நிதியை சேமிக்க முடிந்தது.

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு வெளிநாட்டில் உள்ள இலங்கைப் பணியாளர்கள் பாரியளவில் பங்களிப்புச் செய்கின்றனர்.

2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் முதல் காலாண்டில் வெளிநாட்டில் உள்ள இலங்கைப் பணியாளர்கள் அனுப்பிய பணம் 80.6 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது.

புதிய வரிக் கொள்கைகள் காரணமாக 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 210 பில்லியன் ரூபா மேலதிக வருமானம் கிடைத்துள்ளது. கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் ஒரு இலக்குடன் சரியான பாதையில் செல்வதன் விளைவுகளை இன்று நாம் அனைவரும் அனுபவிக்கிறோம்.

தற்போது, பொருளாதாரத்தின் 33 துறைகளில், 430 அரச நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் 06 வீதமான இலங்கையர்கள் பணிபுரிகின்றனர்.

அரச துறைக்கு சந்தையின் ஏகபோக உரிமை வழங்குவதன் விளைவு, தனியார் முதலீடுகள் வீழ்ச்சியடைவதுதான்.

விலை நிர்ணயம், திறமையற்ற முகாமைத்துவம் மற்றும் மோசமான நிதிச் செயல்பாடுகள் காரணமாக, இந்த தொழில்முயற்சியாளர்கள் தொடர்ந்து நட்டத்தை சந்தித்து வருகின்றனர்.

2021 ஆம் ஆண்டில், இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம், இலங்கை மின்சார சபை மற்றும் ஸ்ரீலங்கன் எயார் லைன் ஆகியவற்றின் செயற்பாட்டு இயக்கத்தினால் ஏற்பட்ட இழப்பு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.6 சதவீதமாகும். இந்தக் கடன் சுமையை 22 மில்லியன் மக்கள் மீது சுமத்துவது நியாயமற்றது.

இந்தத் தோல்வியடைந்த நிறுவனங்களை நிர்வகிக்க பெருமளவிலான மக்களின் வரிப்பணத்தைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. இந்த நிறுவனங்கள் அரசாங்கத்துக்கும் சுமையாக உள்ளன. நாட்டுக்கும் சுமை. மக்களுக்கும் சுமை.

எனவே, இவற்றை வெற்றியடையச் செய்வதற்குத் தேவையான சீர்திருத்தங்களையும் மறுசீரமைப்புகளையும் நாம் செய்ய வேண்டும். அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் திட்டத்தை நாம் ஏற்கனவே தயாரிக்கத் தொடங்கியுள்ளோம்.

இந்தத் திட்டத்தின் மூலம் இந்த நிறுவனங்கள் வெற்றிபெற முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.

அடுத்த 5 ஆண்டுகளில் நாம் பொருளாதாரத்தை முழுமையாக ஸ்திரப்படுத்துவோம். அடுத்த 25 ஆண்டுகளில் உயர் வருமானம் ஈட்டும் அபிவிருத்தி அடைந்த நாடாக மாறும். அதுவே எங்களின் நோக்கமாகும்.

முதல் 5 ஆண்டுகளுக்குப் பிறகு, நாட்டைக் கட்டியெழுப்பும் பணி அடுத்த தலைமுறைக்கு ஒப்படைக்கப்பட வேண்டும்.

அதற்காக நாம் இளைஞர்களை தயார்படுத்தி வருகிறோம். 2048 அபிவிருத்தி அடைந்த ஒரு நாடு. அதுவே எங்களின் இலக்கு. இந்த இலக்கை அடைவதே எங்கள் போராட்டம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: