அடுத்த 25 வருடங்களுக்குள் இலங்கை மிகப்பெரிய அபிவிருத்தி இலக்கை அடையும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை!

Monday, March 27th, 2023

இலங்கை அடுத்த 25 வருடங்களுக்குள் இந்து சமுத்திரத்தின் ஏனைய நாடுகள் மற்றும் தெற்காசியாவுடன் இணைந்து பயணித்து மிகப்பெரிய அபிவிருத்தி இலக்குகளை அடையும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஹார்வட் பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், 25 வருடகால புதிய மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் இலக்குகளை அடைவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், நாட்டை முன்னேற்றுவதற்கான தொடர்ச்சியான வேலைத்திட்டங்களில் இணைந்துகொள்ளுமாறு புலம்பெயர் மற்றும் நாட்டின் இளம் சமுதாயத்திற்கு ஜனாதிபதி மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.

காலனித்துவ ஆட்சியிலிருந்து விடுதலை பெற்று 100 வருடங்கள் பூர்த்தி ஆகின்ற 2048 ஆம் ஆண்டில் இலங்கை நடுத்தர வருமானம் ஈட்டும் நாடாக மாறும். அவை அனைத்தும், பொருளாதார மறுசீரமைப்புக்கான அர்ப்பணிப்பிலேயே தங்கியுள்ளது. அதற்காக நமது மூலோபாய அமைவிடத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

நாம் பலமான ஜனநாயக கட்டமைப்பினையும் திறந்த பொருளாதாரத்தையும் கொண்டுள்ள சிறியதொரு நாடு என்ற வகையில் அரசியல் ஸ்திரத்தன்மையை பேணி வருகின்ற அதேநேரம் எமது அயல்நாடும் நீண்ட கால உறவை பேணிவரும் நாடுமான இந்தியாவை, வலயத்தின் பாதுகாவலனாக கருதுகிறோம்.

பழமையான பொருளாதார கொள்கைகளுடன் புத்துயிர் பெற்றுவருகின்ற ஆசிய வலயம் மற்றும் இந்தியாவின் அபிவிருத்திச் செயற்பாடுகளோடு கைகோர்த்துக்கொண்டு பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் பணிகளில் இலங்கை முன்நின்று செயற்படுகின்றது.

இந்தியாவுடன் காணப்படுகின்ற சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் தொழில்நுட்ப ஒப்பந்தமாக மாற்றியமைத்துக்கொள்வது சிறந்தது.

ஆசியாவின் மீக நீண்ட பொருளாதார கூட்டிணைவுடன் பொருளாதார ஒப்பந்தங்களை கைச்சாத்திடுவதால் உலகின் மிகப்பெரிய பொருளாதார குழுவுடன் முன்னோக்கிச் செல்வதற்கான வாய்ப்பு கிட்டும்.

அத்துடன் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக அனைத்து இன மக்களுக்கும் சம அந்தஸ்த்து மற்றும் வளங்களை பெற்றுக்கொடுக்க வேண்டியது அவசியமாகும்.

உள்ளக பேச்சுவார்த்தைகள், நெருக்கமான புரிந்துணர்வு மற்றும் இனக் குழுக்கள் இடையிலான பல்வகைத் தன்மையை புரிந்துகொள்வதன் மூலம் தேசிய ஒற்றுமையை மேம்படுத்த முடியும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

அத்தோடு, செல்வந்த நாடுகளின் மோதல் இலங்கைக்கு திறக்கப்படவுள்ள இந்திய மற்றும் ஆபிரிக்க வலயத்தின் பொருளாதார சந்தை வாய்ப்புக்களுக்கு தடையாக அமையாது என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: