அடுத்த வருடம்முதல் இலங்கைக்கு பொருந்தும் வகையிலான புதிய பாடத்திட்டம் நடைமுறைக்குவரும் – கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு!

Friday, August 21st, 2020

தற்காலத்திற்கு பொருந்தும் வகையில் பாடசாலைப் பாடத்திட்டங்களை புதுப்பிப்பது தொடர்பில் அமைச்சரவைப் பத்திரமொன்று விரைவில் தயாரிக்கப்படுமென கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

பல பிரதான பாடசாலைகளின் அதிபர்களுடன் நேற்று (20) கல்வி அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது உயர்தர வகுப்புக்களில் பல்வேறு பாடங்களுக்கு பாடப்புத்தகம் இல்லாத காரணத்தினால் ஏற்பட்டுள்ள சிக்கல் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

மாணவர்களின் பகுப்பாய்வு அறிவையும், விமர்சன ரீதியாக சிந்திக்கும் ஆற்றலையும் விருத்தி செய்வது முக்கியமாகும், தற்போதுள்ள கல்வி கட்டமைப்பில் இதற்கான சந்தர்ப்பம் குறைவாகவே உள்ளது.இருப்பினும் மாணவர்களின் ஆர்வத்தை மேம்படுத்தும் வகையில் கல்வி கட்டமைப்பை மாற்றியமைக்க வேண்டிய தேவை காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தொழில்வாய்ப்புக்களுக்கு ஏற்ற வகையில் பாட விதானங்கள் அமைய வேண்டிய விதம் பற்றிய கருத்துக்களை முன்வைக்குமாறு அமைச்சர், அதிபர்களைக் கேட்டுக் கொண்டதுடன். பாடவிதான விருத்தி தொடர்பில் நாடளாவிய ரீதியில் ஒரு விரிவான கருத்தாடலை ஏற்படுத்துவதாகவும் கல்வி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இதனிடையே அடுத்த வருடம்முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கைக்கு பொருந்தும் வகையிலான சர்வதேச தரத்திற்கு அமைய புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸின் ஆலோசனைக்கு அமைய, இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில், முதலாம் தரத்தில் இருந்து 13 ஆம் தரம் வரை பாடத்திட்டங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த திருத்தத்தின்போது நாட்டின் பொருளாதார முறைமை, தொழில் சந்தை ஆகியவற்றை உள்ளடக்கியதாக புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்படும் எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பிலான கருத்துக்கள் மற்றும் யோசனைகளை மாவட்ட ரீதியாகப் பெற்றுக்கொள்வதற்கும் எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதன்போது கல்வித்துறைசார் வல்லுநர்கள், மாணவர்கள், வர்த்தகப் பிரிவினர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்களின் கருத்துக்கள் மற்றும் யோசனைகளைப் பெற்றுக்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்..

அத்துடன் புதிய பாடத்திட்டத்தின் மூலம் தற்போதைய கல்வி முறையூடாக மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் புதிய பாடத்திட்டத்தை அடுத்த வருடம்முதல் பாடசாலைகளில் அறிமுகப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: