அடுத்த இரு ஆண்டுகளுக்காக ஒன்றரை பில்லியனை இலங்கைக்கு வழங்க உலக வங்கி இணக்கம்!

Sunday, March 5th, 2023

இலங்கைக்கு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்காக  ஒன்றரை பில்லியன் டொலர்களை வழங்குவதற்கு உலக வங்கியின் பிரதிநிதிகள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க மற்றும் உலக வங்கியின் பிரதிநிதிகளுக்கிடையில் கடந்த வாரம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்திற்கான உப தலைவர் மார்டின் ரைஸர் உள்ளிட்ட குழுவினர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியதன் பின்னர் , பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க உள்ளிட்டோரையும் சந்தித்து இந்த இணக்கப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர்

சர்வதேச நாணய நிதியத்தின் அனுமதி கிடைத்தவுடன் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இந்தப் பணம் ஒதுக்கப்பட்டு , அதன் முதல் பாகம் உடனடியாக வழங்கப்படும் என உலக வங்கியின் பிரதிநிதிகள் இதன் போது உறுதியளித்துள்ளனர்.

நிதி ஒழுக்கத்தை நிலைநாட்ட அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள உலக வங்கியின் பிரதிநிதிகள், இந்த பணிகளை தொடர தேவையான தொழிநுட்ப ஆதரவை வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

Related posts: