அஞ்சல் ஊழியர்களின் போராட்டத்தால் தண்டப் பணங்கள், விண்ணப்பங்களை பிரதேச செயலகங்களில் வழங்கலாம்!

Tuesday, June 26th, 2018

அஞ்சல் அலுவலகத்தினரின் தொடர் பணிப்புறக்கணிப்பினால் பொதுமக்கள் மற்றும் பரீட்சைகளுக்கு விண்ணப்பிப்பவர்களும் பாதிப்புக்கு உள்ளாகி வருவதைக் கருத்தில் கொண்டு அந்தந்தப் பிரதேச செயலகங்களில் பணம் செலுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டது.

வீதிச் சோதனையில் ஈடுபடும் போக்குவரத்துக் கண்காணிப்புப் பொலிஸார் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகனச் சாரதிகளுக்கு சம்பவ இடத்து தண்டம் விதித்து அருகில் உள்ள அஞ்சல் அலுவலகத்தில் செலுத்துமாறு கூறுகின்றனர்.

அஞ்சல் அலுவலகங்களில் பணிப்புறக்கணிப்பு இடம்பெறுவதால் தண்டப்பணம் செலுத்த முடியாத நிலையில் பலர் காணப்படுகின்றனர். சிட்டை வழங்கப்பட்டு 14 தினங்களுக்குள் தண்டப்பணம் செலுத்தப்படாவிடின் தண்டம் இருமடங்காகச் செலுத்த வேண்டிவரும் என குறிப்பிட்டுள்ளதால் சாரதிகள் சிரமங்களை எதிர்நோக்குவதையும் காணமுடிந்தது.

இது தொடர்பாக பிரதேச செயலகங்கள் தெரிவிக்கையில் – அஞ்சல் அலுவலகங்களில் செலுத்தப்படும் பொலிஸாரினால் விதிக்கப்படும் தண்டப்பணம் மற்றும் பரீட்சைக்கான விண்ணப்பக் கட்டணம் போன்றவை பிரதேச செயலகங்களில் செலுத்த முடியுமென அறிவித்துள்ளனர்.

பொலிஸாரினால் தண்டம் விதிக்கப்பட்ட சாரதிகளும் பரீட்சைக்கு விண்ணப்பிப்பவர்களும் தத்தமது பிரிவு பிரதேச செயலகத்தில் உரிய கட்டணங்களைச் செலுத்தலாமெனவும் தெரிவிக்கப்பட்டது.

Related posts: