அச்சிடுவதற்கு போதிய இயந்திரம் இல்லை – 8 இலட்சம் சாரதி அனுமதி பத்திர அட்டைகள் தேக்கம் என போக்குவரத்து ஆணையாளர் திணைக்களம் தெரிவிப்பு!

Friday, June 30th, 2023

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தில் சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிடுவதற்கு போதியளவிலான இயந்திரங்கள் இன்மையால் சுமார் 8 இலட்சத்துக்கும் அதிகமான சாரதி அனுமதிப் பத்திர அட்டைகள் பலமாதங்களாக வழங்கப்படாதுள்ளதுடன், ஜூன் 19 ஆம் திகதிமுதல் வழங்கப்படவிருந்த தற்காலிக சாரதி அனுமதிப் பத்திர காலம் மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடிக்கப்படுவதாகவும் மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிடுவதற்கான புதிய அச்சு இயந்திரங்களை கொள்வனவு செய்வதற்காக சுமார் 20 கோடி ரூபா செலவிடவேண்டியுள்ளது.

இதனால் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் கணினி அமைப்புக்கு பொறுப்பான நிறுவனம் ‘கார்ட்’களை அச்சிடும் இயந்திரங்களை பெற்று பத்திரமொன்று 150 ரூபா அறவிடும் நடைமுறையுடன் சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிடுவதற்கு அமைச்சரவை அனுமதியை பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

இதுதொடர்பில் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவிக்கையில் –

சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடுவதற்கான அட்டைகள் பற்றாக்குறையாகவுள்ளதால் ஆறு மாதங்களுக்கும் மேலாக சுமார் 08 இலட்சத்துக்கும் அதிகமான சாரதி அனுமதிப் பத்திரங்கள் அச்சிடப்படாமலுள்ளன.

அந்த சாரதி அனுமதிப்பத்திர அட்டைகள் தனியார்துறையிடம் அச்சிடுவதற்கு வழங்கும் யோசனை அமைச்சரவையின் அனுமதிக்காக வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: