அக்கரைப்பற்று பாலமுனையில் பதற்றம்: ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு – பொலிஸ் அதிகாரிகள் உட்பட 12 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

Friday, May 6th, 2022

அக்கரைப்பற்று – பாலமுனை விபத்தொன்றையடுத்து, ஆத்திரமடைந்த பிரதேசவாசிகள் மேற்கொண்ட தாக்குதலில் 7 பொலிஸ் அதிகாரிகள் உட்பட 10 பேர் காயமடைந்துள்ளதுடன், ஒருவர் பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அக்கரைப்பற்று – கல்முனை வீதியில் பாலமுனை வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள வீதியில் அமைக்கப்பட்டுள்ள வீதித் தடையில் நேற்றிரவு, கடமையில் இருந்த பொலிசாரினால், பாதுகாப்பாற்ற முறையில் அதிக வேகத்தில் பயணித்த உந்துருளியொன்றை நிறுத்துவதற்கு சைகை காண்பிக்கப்பட்டுள்ளது.

அச்சந்தர்ப்பத்தில் குறித்த உந்துருளி வீதியில் வழுக்கிச்சென்று விபத்துக்குள்ளானதில் அதனை செலுத்திய நபர் காயமடைந்தார். இச்சம்பவம் தொடர்பில் கேள்வியுற்ற சுமார் 700 பிரதேசவாசிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து, வீதித் தடையில் கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரிகளை தாக்கியதுடன், காவலரணுக்கும் தீ வைத்து சேதப்படுத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக சம்பவ இடத்திற்கு சென்றிருந்த அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் பிரதேசவாசிகளின் தாக்குதலில் காயமடைந்ததுடன், நிலைமையை கட்டுப்படுத்த பொலிஸ் அதிகாரியொருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் காயமடைந்ததாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

குழப்ப நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள அதேவேளை, கலகக்காரர்களால் மேற்கொண்ட தாக்குலில் அக்கரைப்பற்று பொலிஸ் பொறுப்பதிகாரி உட்பட 7 பொலிஸ் அதிகாரிகள் மற்றும் சிவில் பாதுகாப்பு படைப்பிரிவின் 3 அதிகாரிகளும் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் அக்கரைப்பற்று மற்றும் அம்பாறை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், பொலிஸ்யினரின் துப்பாக்கிச் சூட்டிக்கு இலக்கான நபரும், விபத்தில் காயமடைந்த உந்துருளி செலுத்துநரும் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் உடல் நிலைமை மோசமானதாக இல்லை என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் கிழக்கு மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, பொத்துவில் வலயத்துக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகரின் தலைமையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: