80 இலட்சம் பெறுமதியான புகையிலைத் தூள் சுங்கப் பிரிவிடம் சிக்கியது!
Wednesday, April 12th, 2017சட்டத்திற்கு மாற்றமான முறையில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட புகையிலைத் தூள் அடங்கிய 30,000 குப்பிகள் மற்றும் 2000 கிலோகிராம் பீடி இலைகளும் சுங்கத் திணைக்களத்தால் கைப்பற்றப்பட்டதாக அதன் ஊடகப் பேச்சாளர் தர்மசேன கஹந்தவ தெரிவித்துள்ளார்.
பேலியகொட சுங்கப் பிரிவில் இன்று மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் இவை கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட இவற்றின் பெறுமதி சுமார் 80 இலட்சம் ரூபா என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் சென்னை துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட 61 பயணப் பெட்டிகளை சோதனை செய்த போது இந்த பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், அவற்றில் துணி இருப்பதாக கூறி இலங்கைக்கு எடுத்து வரப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் தர்மசேன கஹந்தவ கூறினார்.
புகையிலைத் தூள் இலங்கை கொண்டு வருவது தடை என்பதுடன், பீடி இலைகளுக்காக பெருந்தொகை தீர்வை வரி அறிவிடப்படுவதனால் இவை மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
இவை புறக்கோட்டை வர்த்தகர் ஒருவரினால் கொண்டு வரப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளதுடன், விசாரணைகளின் பின்னர் இவற்றை அரசுடமையாக்க நடவடிக்கை எடுப்பதாக தர்மசேன கஹந்தவ கூறினார்.
Related posts:
|
|