8 கிலோ தங்கம் மாயம்?- எப்.சீ.ஐ.டி.விசாரணை!

Monday, May 16th, 2016

இந்தியாவுக்கு கடத்தப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் இலங்கை கடற்படையினரால் மாதகல் கடலில் வைத்து கைப்பற்றப்பட்ட 45 கிலோ தங்கத்தில் 8 கிலோ தங்கம் மாயமானது குறித்து நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

குறித்த 45 கிலோ தங்கத்தை கடற்படையினர் சுங்கப்பிரிவினரிடம் கையளித்த பின்னர் 12 மணித்தியாலத்திற்குள் அதில் 8 கிலோ தங்கத்தினை மீள எடுத்துச் சென்றதாக கூறப்படும் விவகாரம் தொடர்பிலேயே இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

2014 ஆம் ஆண்டு ஒக்டோபர் முதலாம் திகதி வடமேல் கடற்படை புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் படி 45.03 கிலோ தங்கம் மாதகல் கடலில் வைத்து படகு ஒன்றிலிருந்து மீட்கப்பட்டது. அந்த தங்கமானது மறுநாள் சுங்கப்பிரிவினரிடம் கையளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே அப்போதைய கடற்படைத் தளபதிவைஸ் அட்மிரல் எஸ்.என்.ஜே.பெரேரா சுங்கப் பணிப்பாளர் நாயகத்திற்கு கோரிக்கைகடிதம் ஒன்றினை அனுப்பியுள்ள நிலையில் தங்க புத்தர் சிலை ஒன்றினை நிர்மாணிப்பதற்காக கைப்பற்றப்பட்ட தங்கத்தில் 8 கிலோவினை மீளக் கோரியுள்ளார்.

பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஆலோசனைக்கு அமைவாக அதனைக் கோருவதாகவும் அக்கடிதத்தில் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். இதனையடுத்து 8 கிலோ தங்கம் மீள வழங்கப்பட்டுள்ளது.

சுங்கப்பிரிவின் பொறுப்பில் எடுக்கப்படும் எந்தப் பொருளும் 30 நாளுக்கு முன் எந்தவொரு காரணத்திற்காகவும் விடுவிக்கப்பட முடியாது என சுங்க கட்டளைச் சட்டம் குறிப்பிடும் நிலையிலேயே கைப்பற்றப்பட்டு 24 மணிநேரத்திற்குள் இந்த தங்கம் மீளளிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

எனினும் இந்த தங்கத்திற்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் இதுவரை தெரியாத நிலையிலேயே நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவு தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts: