நீதிமன்றை புறக்கணித்து வெளிநாடு சென்றுள்ளதால் தமயந்தி ஜயரத்னவை கைது செய்யுமாறு நீதிமன்றம் பிடியாணை!

Monday, September 23rd, 2019


எவன்கார்ட் நிறுவனத்திற்கு மிதக்கும் ஆயுதக்கிடங்கு ஒன்றை நடாத்திச் செல்ல அனுமதி அளித்ததன் ஊடாக அரசாங்கத்திற்கு 1140 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தி இலஞ்ச ஆணைக்குழுவால் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கின் 8 ஆவது பிரதிவாதியாக பெயரிடப்பட்டிருந்த பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் தமயந்தி ஜயரத்ன நீதிமன்றை புறக்கணித்து வெளிநாடு சென்றுள்ளதால் அவரை கைது செய்யுமாறு பிடியாணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று (23) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் அழைக்கப்பட்ட போது மேன்முறையீட்டு நீதிமன்றின் உத்தரவின் பேரில் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 8 பேரையும் விடுதலை செய்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

எவ்வாறாயினும், போதிய அளவு சாட்சியங்கள் இருந்தால் குறித்த சந்தேகநபர்களுக்கு எதிராக குறித்த குற்றச்சாட்டுக்களின் கீழ் உரிய முறையில் வழக்கு தொடர இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு வாய்ப்புள்ளதாக நீதவான் அறிவித்தார்.

அதேபோல், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் தமயந்தி ஜயரத்ன நீதிமன்றை புறக்கணித்து வெளிநாடு சென்றுள்ளதால் அவரை கைது செய்யுமாறு நீதிமன்றம் பிடியாணை ஒன்றை வெளியிட்டது.

இந்நிலையில், தமயந்தி ஜயரத்ன சார்பில் நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணி, குறித்த வழக்கில் இருந்து தனது கட்சிக்காரர் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு எதிரான பிடியாணையை மீள அழைக்குமாறு கோரியிருந்தார்.

எனினும், குறித்த பிரதிவாதிக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் விடுதலை செய்யப்பட்டுள்ள போதும் நீதிமன்றில் முன்னிலையாகி குறித்த பிடியாணையை மீண்டும் அழைக்க நடவடிக்கை எடுக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Related posts: