ஹட்டனில் பேருந்து விபத்து – ஒருவர் பலி – 16 பேர் காயம்!

Friday, January 28th, 2022

டிக்கோயா சலங்கந்தை – ஹட்டன் பிரதான வீதியில் தரவளை பட்டல்கலை பிரதேசத்துக்கு அருகில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஒருவர் பலியானார்.

சம்பவத்தில் காயமடைந்த மேலும் 16 பேர் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து இன்று காலை 6.45 அளவில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.

சலங்கந்தை பகுதியிலிருந்து ஹட்டனில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றுக்கு பணியாளர்களை ஏற்றிச்சென்ற பேருந்தொன்றே இவ்வாறு வீதியை விட்டு விலகி சுமார் 45 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

எதிரே வந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தொன்றுக்கு இடம் கொடுக்க முயன்றபோதே, குறித்த தனியார் பேருந்து இவ்வாறு பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..

விபத்தில் பேருந்து சாரதி உட்பட 17 பேர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் டிக்கோயா போடைஸ் பகுதியை சேர்ந்த 62 வயதுடைய பெர்னாண்டோ மரியசவரி என்ற நபரென அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதேவேளை, விபத்துக்குள்ளான பேருந்தின் சாரதியை ஹட்டன் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அவரை ஹட்டன் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் எடுத்துள்ள ஹட்டன் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

கண்காணிப்புச் சபை உறுப்பினர்களின் இராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டது - அமைச்சர் கபீர் ஹசீம்!
பிரச்சினை மேலும் பெரிதாவதற்கு முன்னர் ஜனாதிபதி நேரடியாகத் தலையிட வேண்டும் - பொது சுகாதார பரிசோதகர்க...
மின் கட்டணத்தை நினைத்தவுடன் இனைத்தவாறு அதிகரிக்க முடியாது - பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் அறிவி...