வலி.வடக்கில் கல் அகழ்வு தொடர்பில் தெல்லிப்பழையில் முறையிடலாம்!
Thursday, January 5th, 2017
வலி.வடக்கு பகுதியில் மக்களின் காணிகளில் இனந்தெரியாதவர்கள் சுண்ணாம்புக்கல் அகழ்ந்தால் அது தொடர்பாக தெல்லிப்பழைப் பொலிஸ் நிலையத்தில் முறையிடலாம் என யாழ்.மாவட்ட செயலாளர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
பலாலியில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்து அண்மையில் பொது மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டன. அவற்றில் மக்கள் இன்னமும் முழுமையாகக் குடியமரவில்லை. உரிமையாளர்கள் இல்லாத காணிகளில் திருட்டத்தனமாக சுண்ணாம்புக்கல் அகழப்பட்டு இரவு வேளைகளில் வாகனங்களில் கொண்டு செல்லப்படுகின்றது என்று பொது மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இது தொடர்பாக பொலிஸ் நிலையங்களில் முறையிட முடியாதுள்ளது என்றும் அவர்கள் கூறுகின்றனர். இந்தப் பிரதேசம் பலாலி பொலிஸ் நிலையத்தின் ஆளுகைக்குட்பட்டது. தெல்லிப்பழை பொலிஸாரோ, காங்கேசன்துறை பொலிஸாரோ முறைப்பாடுகளை ஏற்க மறுக்கின்றனர்.
பலாலி பொலிஸ் நிலையம் இன்னமும் உயர் பாதுகாப்பு வலயத்துக்குள்ளேயே இருக்கின்றது. அங்கு சாதாரண மக்கள் செல்ல முடியாது நாம் எங்கு முறையிடுவது என்று தெரியவில்லை – என்று பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த மாவட்ட செயலாளர் வேதநாயகன் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பாக முறைப்பாடு செய்யலாம். என்று தெரிவித்தார்.

Related posts:
|
|
|


