மீளக்குடியமர 700 குடும்பங்கள் விண்ணப்பம்!

Monday, March 21st, 2016

கடந்த டிசெம்பர் மாதம் 29ஆம் திகதி இராணுவ உயர் பாதுகாப்பு வலய பகுதியில் இருந்து விடுவிக்கப்பட்ட 701.5 ஏக்கர் நிலப்பரப்பில் 486.5 ஏக்கர் நிலப்பரப்பை கொண்ட தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் 700 குடும்பங்கள் மீளக்குடியமர விரும்பம் தெரிவித்து தமது பதிவுகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் விடுவிக்கப்பட்ட பகுதியில் அனேகமானவை மக்களின் விவசாயக் காணிகள் எனவும் இவற்றில் நிரந்தர வீடுகளை கொண்டிருந்தவர்களும் விவசாய காணியில் தற்காலிக குடிசை அமைத்து குடியமர விருப்பம் தெரிவித்தவர்களுமாக 700 குடும்பங்கள் இவ் விண்ணப்பத்தை பதிவு செய்துள்ளன.

இதன் அடிப்படையில் ஜே-235 காங்கேசன்துறை தெற்கு, ஜே-236 பளை வீமான்காமம் வடக்கு, ஜே-250 தையிட்டிதெற்கு, ஜே-245 மயிலிட்டி வடக்கு, ஜே-252 பலாலி தெற்கு, ஜே-253 பலாலி கிழக்கு, ஜே-254 பலாலி வடக்கு ஆகிய ஏழு கிராம சேவையாளர் பிரிவில் இம் மீள்குடியேற்றத்துக்கு விண்ணப்பம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமது காணிகளை அடையாளப்படுத்தி பதிவை மேற்கொண்ட 700 பேருக்குமான முதற்கட்ட கொடுப்பனவான 13 ஆயிரம் ரூபாய் எதிர்வரும் நாட்களில் வழங்கி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், 1 பரப்பு காணியை துப்பரவு செய்வதற்கு கூலியாக 1,781 ரூபாய் 25 சதம் மீள்குடியேற்ற அமைச்சினால் வழங்கி வைக்கப்படவுள்ளதாக பிரதேச செயலக வட்டாரத் தகவல்கள்  தெரிவித்தன.

Related posts: