மீட்டர் பொருத்தப்பட்ட முச்சக்கர வண்டிகளுக்கு எரிபொருள் ஒதுக்கீட்டினை அதிகரிக்க நடவடிக்கை – மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Wednesday, September 7th, 2022

மீட்டர் பொருத்தப்பட்ட முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டினை அதிகரிக்க எதிர்பார்க்கப்படுவதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீடு தொடர்பில் கருத்துரைக்கும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

மீட்டர் பொருத்தப்பட்ட முச்சக்கர வண்டிகளில் குறிப்பிட்ட தூரத்திற்கு காட்சிப்படுத்தப்படும் கட்டணத்தை மாத்திரம் அறவிடுவதன் காரணமாக அவர்களுக்கு ஒதுக்கப்படும் எரிபொருள் தொகையினை அதிகரிப்பதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீட்டினை தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றுக்கொள்ளும் வகையிலும், வழமையான ஒதுக்கப்பட 5 லீற்றர் எரிபொருளினை எந்தவொரு எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் பெற்றுக்கொள்ளும் வகையிலும் புதிய வேலைத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுமென அவர் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் போக்குவரத்து அமைச்சின் தகவல்களை பெற்றதன் பின்னர் இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படுமெனவும் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

இதேவேளை

மக்கள் இக்கட்டான நிலையில் இருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் எரிபொருள் சலுகையை மக்களுக்கு வழங்க வாய்ப்பு காணப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

எரிபொருள் விலை சூத்திரம் நடைமுறைப்படுத்தப்பட்டால் உலக சந்தையில் உள்ள விலைகளுக்கு ஏற்ப ஒரு லீற்றர் எரிபொருளின் விலையை 50 ரூபாயால் குறைக்க முடியும்.

எரிபொருள் விலைச் சூத்திரத்தின் பிரகாரம் செயற்படுவதாக அரசாங்கம் தெரிவிக்கின்ற போதும் வரி செலுத்தியதன் பின்னர், அரசாங்கத்துக்கு தற்போது ஒரு லீற்றர் எரிபொருளுக்கு 50 ரூபாய் இலாபம் கிடைத்து வருகிறது.

மேலும் விலைச்சூத்திரம் தொடர்பில் சட்ட நிலை எதுவும் இல்லாத காரணத்தால் அரசாங்கம் விரும்பியவாறு செயற்பட முடியும் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: