மலையகத்தில் கடும் வறட்சி: தோட்டத் தொழிலாழர்கள் அவதி!

Monday, March 14th, 2016

பெருந்தோட்ட பகுதியில் கடந்த 3 மாதகாலமாக நிலவிவரும் வரட்சி காலநிலை காரணமாக தொழிலாளர்கள் பல்வேறுப்பட்ட பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.

தொடர்ந்து வரும் வரட்சியால் அதிகமான தேயிலை செடிகள் கருகி காணப்படுவதோடு தேயிலை செடிகளில் கொழுந்து விளைச்சலும் குறைவடைந்துள்ளது. இதனால், தோட்ட நிர்வாகத்தால் தொழிலாளர்களுக்கு அதிகமான வேலை நாட்களை வழங்க முடியாத நிலைக்கு தோட்ட நிர்வாகங்கள் தள்ளப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக தெரியவருவதாவது –

தொழிலாளர்களுக்கு வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் மாத்திரமே தொழில் வழங்கப்படுவதால் பொருளாதார ரீதியில் தனது குடும்ப சுமையுடன் வாழ வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு முகங்கொடுக்கின்றனர்.

ஒரு நாள் சம்பளத்திற்காக தோட்ட தொழிலாளர்களை 18 கிலோ கொழுந்தினை பறிக்குமாறு தோட்ட நிர்வாகம் அழுத்தம் கொடுக்கின்றது. தற்போது தேயிலை செடிகளில் கொழுந்தின் விளைச்சல் குறைவாக காணப்படுவதால் நிர்வாகங்கள் கேட்கும் 18 கிலோ கொழுந்தினை பறிக்க முடியாத இக்கட்டான சூழ்நிலையை தொழிலாளர்கள் எதிர் நோக்கி வருகின்றனர்.

trought_3

கூட்டு ஒப்பந்தம் நிறைவடைந்து ஒரு வருடம்  பூர்த்தியாகியுள்ள நிலையில்  ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் அசமந்த போக்கினை கடைப்பிடிப்பதாக தொழிலாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆயிரம் ரூபாய் பெற்று தருவதாக தொழிலாளர்கள் மத்தியில் உறுதி மொழி வழங்கிய போதிலும், இது வரை எந்த விதமான பேச்சுவார்த்தையும் சரியான முறையில் முன்னெடுக்கவில்லை என தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை தேர்தல் காலத்தில் தற்போது அமைச்சராக இருக்கின்ற பழனி திகாம்பரம்  மக்கள் மத்தியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஆயிரம் ரூபா பெற்று தருவதாக கூறியுள்ளார்.

ஒரு நாளுக்கு நூறு ரூபாய் அடிப்படையில் மாதாந்தம் இரண்டாயிரத்து ஐந்நூறு ரூபாய் வழங்குவதாகவும் இந்த பணம் தொழிலாளர்களுக்கு கிடைக்கவில்லை எனவும், தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை,   கோதுமை மாவின் விலை அதிகரிப்பு மலையக மக்களுடைய வயிற்றில் அடித்த ஒரு விடயம்  என தோட்ட தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள இதேவேளையில், கோதுமை மாவின் விலை அதிகரிப்பு தொழிலாளர்களின் மற்றுமொரு வேதனையே! மேலும் கடுமையான வெயில் காரணமாக குடிநீர் தட்டுப்பாடு காணப்படுகின்றது. அது மட்டு இன்றி அதிக வெப்பம் காரணமாக வரட்சியால் பல நீர் ஊற்றுகள்  வற்றிப்போயுள்ளன.

குடும்ப பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்வதற்காக விவசாய நடவடிக்கைகளை முன்னெடுப்பவர்கள் நீர் வசதியில்லாமல் பாதிக்கப்படுவதோடு விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: