பேருந்தில் வந்த பெண்ணின் பணத்தை பறித்த இளைஞன் – விரட்டிப் பிடித்தபோதும் அச்சுறுத்தி தப்பியோட்டம்!

Saturday, July 21st, 2018

யாழ்ப்பாணம் ஐந்து சந்தியில் பேருந்தில் இருந்து இறங்கிய இளம்பெண்ணின் பணப்பையை இளைஞர் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார். அந்த இளைஞரை கஸ்தூரியார் வீதி வரை இளம்பெண் துரத்திச் சென்ற போதும் வேறு எவரும் ஒத்துழைக்காததால் இளைஞரைப் பிடிக்கமுடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் நேற்றுக்காலை 8 மணியளவில் நடந்துள்ளது. மானிப்பாயில் இருந்து பேருந்தில் பயணித்த யுவதி ஐந்து சந்தியில் இறங்கியுள்ளார். அந்தப் பகுதியில் நின்றிருந்த இளைஞர் இளம்பெண்ணின் கைப்பையைப் பறித்துள்ளார். அதிலிருந்த பணத்தை எடுத்துக்கொண்டு கைப்பையை எறிந்து விட்டு தப்பியோடியுள்ளார். இளம்பெண் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரின் உதவியுடன் இளைஞரைத் துரத்திச் சென்றுள்ளார். இளைஞன் ஸ்ரான்லி வீதியூடாக கஸ்தூரியார் வீPதியை அடைந்த போது இளைஞரை மடக்கியுள்ளார். வீதியால் சென்றவர்களிடம் இளைஞரைப் பிடிக்க உதவி கோரியுள்ளார். அங்கிருந்த ஒருவர் இளைஞரைப் பிடிக்க முயன்றுள்ளார். நெருங்கினால் கத்தியால் குத்துவேன் என்று அச்சுறுத்திய இளைஞர் அங்கிருந்து தப்பியோடினார் என்று தெரிவிக்கப்பட்டது.

Related posts: