புதிய வாடிக்கையாளர் சேவை முறை அறிமுகம்!
Thursday, September 8th, 2016
அரச அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் செயற்பாடுகளை மேலும் பயனுள்ளதாக மாற்றுவதற்காக புதிய வாடிக்கையாளர் சேவை முறை ஒன்றை அறிமுகம் செய்ய அரச சேவைகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன..
குறித்த நிறுவனங்கள் ஊடாக வழங்கப்படும் சேவைகள், தேவையான தகவல்கள், சட்டங்கள் மற்றும் விதிமுறைகள், செலவாகும் காலம் நேரம், பணியின் படிமுறைகள் மற்றும் உரிய அதிகாரிகள் என்ற வகைப்படுத்தலில் இந்த சேவை இடம்பெறவுள்ளது.
இதன் முன்னேற்றம் குறித்து ஒவ்வொரு மாதமும் பரீட்சிக்க ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. புதிய அரச சேவைகள் ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டு 08 மாத காலப்பகுதிக்குள் பல சேவைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க அதிகாரிகளின் நியமனங்கள், பணி நிரந்தரப்படுத்தல், சேவைக்கு இணைத்துக் கொள்ளல், இராஜிநாமா மற்றும் ஓய்வு போன்றன தொடர்பில் கிடைத்துள்ள 5736 முறைப்பாடுகளில் 5728 இற்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர அரசாங்க அதிகாரிகளின் பதவி உயர்வு தொடர்பில் 2429 கோரிக்கைகள் இருந்துள்ளதுடன், அதில் 2188 இற்கு தீர்வு வழங்கப்பட்டுள்ளதாகவும் அரச சேவைகள் ஆணைக்குழு கூறியுள்ளது.
அரச அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் தகவல்களை பெற்றுக் கொள்ளல், பயனுள்ளதாக்குதல் மற்றும் கால தாமதமாவதை தடுக்கும் நோக்கில் புதிய வாடிக்கையாளர் சேவையை அறிமுகம் செய்துள்ளதாக அரச சேவைகள் ஆணைக்குழு கூறியுள்ளது.
Related posts:
|
|