பாடசாலை சமூகத்திற்கு கீழ்படியாத மாணவன் சான்று பெற்ற பாடசாலையில் அனுமதிக்கப்பட்டார்!
Saturday, October 8th, 2016
தென்மராட்சி பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் தரம் 11 இல் கல்விகற்கும் மாணவனை அரச சான்று பெற்ற அச்சுவேலி சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் அனுமதிக்குமாறு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற நீதிபதி சிறிநிதி நந்தசேகரன் நேற்று முன்தினம் உத்தரவிட்டுள்ளார்.
மேற்படி மாணவன் பாடசாலையில் ஆசிரியர்களுக்கும், அதிபர்களுக்கும் கட்டுப்படாமை தொடர்பில் பாடசாலையின் அதிபர் அப்பகுதிக்கு உரிய நன்னடத்தை உத்தியோகத்தரின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார்.
குறித்த மாணவனைத் தனது பொறுப்பில் எடுத்துக்கொண்ட நன்னடத்தை உத்தியோகத்தர் நேற்று முன்தினம் அம்மாணவணை சாவகச்சேரி நீதிமன்றில் முற்படுத்தியிருந்தார். ஏற்கனவே இம்மாணவன் குற்றச் செயலொன்றுடன் தொடர்புடைய வழக்கு ஒன்றில் நீதிவானால் எச்சரிக்கை செய்யப்பட்டு பாடசாலையின் ஒழுங்கு விதிகளுக்கு அமைய அதிபர், ஆசிரியர்களுக்குக் கட்டுப்பட்டு கல்வியினைத் தொடர அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
எனினும் குறித்த மாணவன் பாடசாலையின் அதிபருக்கும், ஆசிரியருக்கும் தொடர்ந்து கட்டுப்படாது சக மாணவர்களுடன் அடிதடியில் ஈடுபட்டும், மாணவிகளுடன் தகாத வார்த்தைகள் பேசியும் வந்துள்ளார். குறித்த மாணவனை நீதிமன்றில் முற்படுத்தியபோது நீதிவான், பாடசாலை ஒழுங்கு விதிகளுக்குக் கட்டுப்பட்டு நடக்க முடியாதா? அதிபர், ஆசிரியருக்கு கட்டுப்பட்டு நடக்க கஷ்டமா? எனக் கேட்டார். ஏற்கனவே அறிவுரை கூறித்தானே அனுப்பி கல்வியினைத் தொடர அனுமதி வழங்கினேன் எனக் கேட்டார்.
எனவே உம்மை சான்று பெற்ற பாடசாலைக்கு அனுப்பிவைக்கிறேன் அங்கு பாடசாலையின் ஒழுங்கு விதிகளுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். இல்லையேல் கொழும்பு மக்கோணவிற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். மேலும் இது தொடர்பில் சிறைச்சாலை அத்தியட்சகர் ஊடாக குறித்த மாணவனை அச்சுவேலியில் அமைந்துள்ள சான்றுபெற்ற பாடசாலையில் சேர்ப்பிக்க கட்டளையிட்டார்.
Related posts:
|
|