பணிப்பெண்ணாக சென்ற சகோதரியை மீட்டுத் தாருங்கள்!

Tuesday, August 2nd, 2016

சவுதி அரேபியாவுக்கு கடந்த 3 வருடங்களுக்கு மேலாக வீட்டுப் பணிப் பெண்ணாக சென்ற தனது சகோதரியை மீட்டுத் தாருங்கள் என கந்தையா நிரோஜினி என்ற பெண் கோரிக்கை விடுத்துள்ளார்.

இரண்டு வருடங்களுக்கு மேலாக எந்தவித தொடர்புகளும் இல்லாது அங்கு தடுத்து வைக்கப்பட்டு, மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் தனது சகோதரியை மீட்டுத் தாருங்கள் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு – புன்னைச்சோலை, காளிகோயில் வீதியைச் சேர்ந்த கந்தையா ரஞ்சிதமேரி என்ற 29 வயதுடைய யுவதி, கடந்த 2013 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 19 ஆம் திகதி, கொழும்பிலுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவரினூடாக வீட்டுப் பணிப்பெண்ணாக தொழில்வாய்ப்புப் பெற்று சவுதி அரேபியாவிற்கு சென்றுள்ளார்.

சவுதி அரேபியாவிலுள்ள தமாமிலுள்ள முபாறக் பாலிஹ் முல்ஹி அல் அஜமி என்பவருடைய வீட்டுக்கு பணிப்பெண்ணாகச் சென்றுள்ளார்.

தற்பொழுது 3 வருடங்களாகியுள்ள போதிலும், தனது சகோதரி ஒரு முறையேனும் நாடு திரும்பவில்லை எனவும் யுவதியின் சகோதரியான கந்தையா நிரோஜினி கவலை தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள AB Travels Licence No 2540 2540, தொலைபேசி இலக்கம் 0117536350 முகவரினூடாக சவுதி அரேபியாவிலுள்ள AL- DANA Recruitment தொலைபேசி 3815606 PO Box 68225 தமாம் என்ற நிறுவனத்தினால் அழைக்கப்பட்டே இவர் வீட்டுப் பணிப்பெண்ணாகச் சென்றுள்ளார்.

கடந்த 3 வருடங்களிலும் மாதம் 20 ஆயிரம் ரூபாய் என்ற அடிப்படையில் 6 மாதங்களுக்கான சம்பளம் மாத்திரமே வழங்கப்பட்டது.

தனது சகோதரி சொந்தமாக தொலைபேசி பாவிப்பதை வீட்டு எஜமானர் ஒருபோதும் அனுமதிக்கவில்லை எனவும் அதனால் 6 மாதங்கள் மட்டுமே வீட்டு எஜமானர்களுக்குத் தெரியாமல் அவ்வப்போது தங்களுடன் தொடர்பு கொண்டதாகவும் அவரது சசோதர் குறிப்பிட்டார்.

ஆனால், கடந்த 2 வருடங்களுக்கு மேலாக தனது சகோதரியுடனான எந்தத் தொடர்புகளும் இல்லை எனக் குறிப்பிட்ட அவர், சகோதரி பணி புரியும் வீட்டுத் தொலைபேசிக்கு (009551979777) அழைத்தால் தமது சகோதரியைப் பற்றிய எந்த தகவலையும் தர மறுப்பதாகவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

இரண்டு வருடங்கள் முடிந்த நிலையில், எஜமானர்களுக்குத் தெரியாமல் தங்களுடன் தொலைபேசியில் பேசும்போது, தன்னை சவுதி அரேபியாவிலிருந்து நாட்டுக்கு திருப்பி வரவழைக்குமாறு கூறி அழுததாகவும் அவரது சகோதரி குறிப்பிட்டார்.

இந்த விடயமாக கொழும்பில் அமைந்துள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம், மனித உரிமைகள் ஆணைக்குழு, தன்னார்வ தொண்டர் நிறுவனம் மற்றும் ஜனாதிபதிக்கும் அறிவித்ததாகவும் எனினும் தனது சகோதரியை மீட்டுத் தருவதற்கான முயற்சியை எவரும் எடுக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

தமது குடும்பம் 1990 ஆம் ஆண்டு ஏற்பட்ட யுத்தத்தால் பாதிக்கப்பட்டு அகதிகளாக இடம்பெயர்ந்து பல்வேறு கஷ்டங்களை அனுபவித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர்,

தமது பெற்றோர் வயோதிபர்களாகவுள்ள அதேவேளை, சகோதரிகளில் இரு பெண்கள் நோயாளிகள் எனவும் தமது குடும்பத்தின் கஷ்ட நிலையைக் கருத்திற்கொண்டு வறுமை காரணமாகவே தனது சகோதரி சவுதி அரேபியாவிற்கு சென்றதாகவும் அவரது சகோதரியான கந்தையா நிரோஜினி தெரிவித்தார்.

எனவே, சவுதி அரேபியாவில் மறைத்து வைக்கப்பட்டுள்ள தமது சகோதரியை மீட்டுத் தாருங்கள் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related posts: