நெற் கதிருக்குள் இருந்து தீண்டிய பாம்பினால் 6 பிள்ளைகளின் தந்தை பலி!

Saturday, March 3rd, 2018

பாம்பு தீண்டியதில் சுழிபுரத்தில் ஒருவர் உயிரிழந்தார். அறுவடை செய்த நெற்கதிர்களை அள்ளிக் குவித்தபோது பாம்பு அவரைத் தீண்டியது என்று தெரிவிக்கப்படுகிறது.

வலிகாமம் மேற்கில் உள்ளது சுழிபுரம். அந்தக் கிராமத்தைச் சேர்ந்த பெ.சுப்பிரமணியம் (வயது – 65) என்பவரே உயிரிழந்தார். இவர் 6 பிள்ளைகளின் தந்தை.

நேற்று முன்தினம் வயலில் அருவி வெட்டினார். மதியம் உணவு உட்கொண்டுவிட்டு வெட்டியிருந்த நெற்கதிர்களை அள்ளிக் குவித்துக் கொண்டிருந்தார். அப்போது கையில் ஏதோ குத்தியது போன்ற உணர்வு ஏற்பட்டதாகக் கூறியுள்ளார்.

அவருக்குக் கண் பார்வை குறைவு. அதனால் தன் கையைத் தீண்டியது எது என்பதை அவரால் சரிவரக் கவனிக்க முடியவில்லை என்று உறவினர்கள் தெரிவித்தனர். சிறிது நேரத்திலேயே அவர் மயங்கி வீழ்ந்தார். உடனடியாகச் சங்கானை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சைக்குப் பின்னர் நேற்றுக் காலை அவர் உயிரிழந்தார். தீடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் இறப்புக் குறித்து விசாரணை நடத்தினார். அதன் பின்னர் சடலம் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Related posts: