தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில்  ஊடகவியலாளர் அமரர் நவரட்ணராஜா ஞாபகார்த்த நினைவஞ்சலி நிகழ்வு!

Tuesday, April 26th, 2016

அண்மையில் அமரத்துவமடைந்த ஊடகவியலாளரும் , தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் ஸ்தாபகத் தலைவருமான  அமரர் ந.நவரட்ணராஜாவுக்கு தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில்  நேற்முன்தினம் (24-04-2016) நினைவஞ்சலி நிகழ்வும் , நினைவுப் பகிர்வு நிகழ்வும் வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது .

வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் செயலாளர் லயன் சி. ஹரிகரன் தலைமையில் இடம்பெற்ற இந்த அஞ்சலி நிகழ்வில்   அமரர் ந.நவரட்ணராஜா அவர்களின் திருவுருவப் படத்துக்குத் தற்போதைய  வைத்திய அத்தியட்சகர் க. இளங்கோஞானியர் மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியதைத் தொடர்ந்து  வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் மு.உமாசங்கர் உட்பட  நோயாளர் நலன்புரிச் சங்க உறுப்பினர்கள் அமரரின் திருவுருவப் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர். தற்போதைய வைத்திய அத்தியட்சகர் க. இளங்கோஞானியரின் நினைவுரையும் , முன்னாள் வைத்திய அத்தியட்சகர் வைத்தியகலாநிதி மு.உமாசங்கர்   ”அமரர் ந.நவரட்ணராஜாவும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையும் – ஓர் நினைவுப் பகிர்வு” எனும் தலைப்பில் நினைவுப் பேருரையும் இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து  அஞ்சலியுரைகளை தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் தாதிய பரிபாலகர்  சோ.இராஜேந்திரன், வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் உப செயலாளர் சோ.  செல்வரட்ணம், பதிலுரையை அமரரின்  குடும்ப உறுப்பினர்கள் சார்பில் வலி.வடக்குப்  பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சோ.சுகிர்தன் ஆகியோர் நிகழ்த்தினர் .  நினைவஞ்சலி மற்றும் நினைவுப் பகிர்வு நிகழ்வைத் தொடர்ந்து ஆதார வைத்தியசாலையின் வளாகத்தில் அமரர் ஞாபகார்த்தமாக தென்னங்கன்று நடுகை செய்யப்பட்டது. குறித்த தென்னங்கன்றினை   தற்போதைய  வைத்திய அத்தியட்சகர், முன்னாள் வைத்திய அத்தியட்சகர் மு. உமாசங்கர் , முன்னாள் வலி. வடக்குப் பிரதேச சபையின் தவிசாளர் சோ. சுகிர்தன் ஆகியோர் இணைந்து நடுகை செய்து வைத்தனர்.

Related posts: