திடீர் காய்ச்சலால் குழந்தை இறப்பு!

Wednesday, October 25th, 2017

பிறந்து 21 நாள்களேயான பெண்குழந்தை 2 நாள்கள் பீடிக்கப்பட்டிருந்த ஒரு வகைக் காய்ச்சலால் நேற்று உயிரிழந்தது. குழந்தையின் குருதி மாதிரி பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

கலைவாணி வீதி வடலியடைப்பைச் சேர்ந்த சுமன் அபிஷா என்ற குழந்தையே உயிரிழந்தது.

குழந்தைக்கு கடந்த 21 ஆம் திகதி சனிக்கிழமை இரவு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. குழந்தையின் உடலை ஈரத் துணியால் துடைத்துள்ளனர். மீண்டும் குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் காலையில் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெறப்பட்டது. அன்றிரவு குழந்தைக்குப் பாலூட்டிய பின்னர் குழந்தையைத் தாய் உறங்க வைத்தார். நேற்றுக் காலை பால் கொடுப்பதற்காகக் குழந்தையை எழுப்பிய போது குழந்தை உணர்ச்சியற்ற நிலையில் காணப்பட்டது. குழந்தையை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டோடினர். குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டது.

குழந்தைக்கு ஏற்பட்டது என்னவகைக் காய்ச்சல் என்பது தெரியவரவில்லை. அதனாலேயே குழந்தையின் குருதி மாதிரி பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது. போதனா வைத்தியசாலையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் விசாரணை மேற்கொண்டார். குழந்தையின் சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Related posts: