தகுதியான மாணவர்களுக்கு வாழ்க்கையை வெற்றிகரமாக்கவதற்கு வாய்ப்பை உருவாக்குவது தவறானதா – பாதுகாப்பு செயலாளர் கமால் குணரத்ன கேள்வி!

Tuesday, August 3rd, 2021

உயர்தர பரீட்சையில் தகுதி பெற்றவர்களுக்கு மனித மூலதனம், கிடைக்கும் வளங்கள் மற்றும் பரந்த அறிவின் அதிகபட்ச பயன்பாட்டிற்கான வாய்ப்பே சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தினால் உருவாக்கப்பட்டுள்ளது என பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டம் தொடர்பான உண்மைகளை ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –

கல்வி அமைச்சர், கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுடன் கலந்தாலோசித்ததன் மூலம், தேசிய பல்கலைக்கழகங்களுக்கான மாணவர் அனுமதி எண்ணிக்கை 41,ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ள போதிலும் உயர்தரத்தில் தேர்ச்சி பெற்ற மாணவர்களில் அதிக எண்ணிக்கையானவர்கள் உயர்கல்வி வாய்ப்பினை இழக்கின்றனர்.

செல்வந்த பெற்றோரின் பிள்ளைகள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் உயர்கல்விக்காக வழிநடத்தப்படும்போது, நம் நாட்டிற்குச் சொந்தமான பெரும் தொகை நிதி வெளிநாடுகளுக்கு செல்வதனை மேற்கோள் காட்டிய ஜெனரல் கமல் குணரத்ன, வேறு சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் இணைந்த உள்ளூர் பல்கலைக் கழகங்களில் சேர்க்கின்றனர் எனக் குறிப்பிட்டுள்ளார்..

“இருப்பினும், நம் நாட்டில் உள்ள ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் வசதி இல்லாததால், அவர்களின் உயர் கல்வியின் கனவுகளை நிறைவேற்றுவதற்கான வழிகளை இழக்கின்றனர்” என்று தெரிவித்த அவர், அவ்வாறான மாணவ தலைமுறையின் தகுதியான பிரிவினர் தங்கள் வாழ்க்கையை வெற்றிகரமாக ஆக்குவதற்கான வாய்ப்பை உருவாக்குவது தவறா என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

மேலும் கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளித்த பாதுகாப்புச் செயலாளர், கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் கல்வி இராணுவமயமாக்கப்பட்டுள்ளது என நம் சமூகத்தில் பரப்பப்பட்டுள்ள விடயம் முற்றிலும் தவறானது என்று சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

Related posts: