சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி விவகாரம்: தீர்வு காண ஜனாதிபதி நடவடிக்ககை!

தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அது தொடர்பாக நியமிக்கப்படும் விசேட குழுவின் சிபாரிசுக்களை பெற்றுக்கொள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தீர்மானித்துள்ளார்.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மற்றும் அரச பல் வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளின் குழுவினருடன் நேற்று முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
மாலபே சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பாக உருவாகியுள்ள சிக்கல் தொடர்பாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் தமது கருத்துக்களை ஜனாதிபதிக்கு தெரிவித்தனர். இப்பிரச்சினைக்கு தீர்வு காணும்போது கவனத்தில் கொள்ளவேண்டிய விடயங்களாக கருதப்படும் ஆலோசனைகளை ஜனாதிபதியிடம் கையளித்தனர்.
இரு தரப்பினராலும் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் தொடர்பாக அவதானம் செலுத்திய ஜனாதிபதி இப்பிரச்சினைக்கான தீர்வுக்கு நாட்டின் ஏனைய துறைசார் நிபுணர்களினதும் ஆலோசனைகளையும் சிபாரிசுக்களையும் கவனத்தில்கொள்ள வேண்டுமென தான் கருதுவதாக இதன்போது தெரிவித்தார்.
அதற்கேற்ப சகல தரப்பினராலும் சமர்ப்பிக்கப்படும் ஆலோசனைகளும் சிபாரிசுக்களும் நியமிக்கப்படும் விசேட குழுவிற்கு வழங்கப்பட்டு அவர்களால் முன்வைக்கப்படும் சிபாரிசுக்களை அடிப்படையாகக் கொண்டு இறுதி தீர்மானங்களை தான் மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி அதன் தலைவர் வைத்திய கலாநிதி பீ.எஸ்.எம்.ஏ.பீ. பாதெனிய மற்றும் அதன் செயலாளர் வைத்திய கலாநிதி எச்.என்.டீ. சொய்சா, அரச பல் வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்திய கலாநிதி ஆனந்த ரத்நாயக, அதன் செயலாளர் வைத்திய கலாநிதி விபுல விக்கிரமசிங்க உள்ளிட்டோர் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.
Related posts:
|
|