சுனாமியில் காணாமல் போன 3 வயது மகள்  தாய்  தந்தையருடன் இணைந்த நெகிழ்ச்சி!

Saturday, August 6th, 2016

சுனாமி காரணமாக தனது தந்தையிடமிருந்து பிரிந்த மகள் 12 வருடங்களின் பின்னர் மீளத் திரும்பியுள்ளார்.

நாட்டில் பல ஆயிரம் உயிர்களைக் காவுகொண்டு, இலங்கையர்கள் அனைவரின் கண்களிலும் கண்ணீரைக் கசிய வைத்தே, 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி நிறைவுற்றது.தனது தந்தையுடன் ஹம்பாந்தோட்டைக்கு சென்ற ஷரீஃபாவை, இந்த பாரிய அலை பிரித்த சந்தர்ப்பத்தில், அவளுக்கு மூன்று வயதாகும்.

அன்றிலிருந்து ஷரீஃபாவின் பெற்றோர் தமது மகளைத் தேடுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்ட போதிலும், அவை பயனளிக்கவில்லை.சுனாமியின் போது நிர்க்கதிக்குள்ளான சிறுமியொருவரின் நிழற்படங்கள் இணையத்தளத்தில் பரிமாற்றப்பட்டமை இந்த பெற்றோரின் விதியை மாற்றியமைத்தது.

காணாமற்போன ஷரீஃபாவின் உருவத்தை ஒத்த குறித்த நிழற்படங்கள் தொடர்பில் உறவினர் ஒருவர் வழங்கிய தகவல்கள், ஷரீஃபாவின் தந்தைக்கு புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அம்பாறை – கல்முனை பிரதேசத்தில் வசிக்கும், குறித்த நிழற்படத்தில் இருந்த சிறுமியை தேடிச்சென்ற ஷரீஃபாவின் பெற்றோர், உருவம் மற்றும் உடலில் காணப்படும் அடையாளங்களின் ஊடாக, இது தமது மகள் என்பதை இனங்கண்டனர்.

எனினும், தமது மகளைப் பெற்றுக்கொள்வதற்காக நீதிமன்றத்தை நாடிய ஷரீஃபாவின் பெற்றோருக்கு இறுதியில் அந்த அதிர்ஷ்ட நாள் நேற்று கிட்டியது.அவர்களின் செல்ல மகளின் உரிமை சட்டத்தின் முன் உறுதி செய்யப்பட்டது.புதிய உருவத்துடன் தனது பழைய வாழ்க்கையைத் தேடும் ஷரீஃபா, தனது உறவினர்கள் பலரை நேற்று அடையாளங்கண்டு கொண்டார்.

இதேவேளை, இரண்டு நாட்களுக்கு முன்னர் காணாமற்போன 10 மாதங்களேயான ரில்வானை, கோட்டை பொலிஸார் மீண்டும் இன்று தாயிடம் ஒப்படைத்தனர்.கோட்டை ரயில் நிலையத்தில் தாயொருவர் தனது மகனுடன் வாழ்ந்து வந்துள்ளார்.கடந்த 2 ஆம் திகதி தனது பிள்ளையுடன் அந்தத் தாய் காலி முகத்திடலுக்கு சென்றிருந்ததுடன், தாய் மலசலக்கூடத்திற்கு சென்றிருந்த சந்தர்ப்பத்தில் பிள்ளை கடத்தப்பட்டிருந்தது.

தாய் வழங்கிய தகவலின் அடிப்படையில் செயற்பட்ட பொலிஸார், பிள்ளையைக் கடத்திய நபரை சிலாபத்தில் நேற்று கைது செய்தனர்.கிருலப்பனை பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டதுடன், அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Related posts: