சுகாதார வழிமுறைகளை பின்பற்றத் தவறினால் நாட்டில் அடுத்த 10 வாரங்களில் டெல்டா பரவல் தீவிரமடையும் – இராஜாங்க அமைச்சர் சுதர்சினி எச்சரிக்கை!

Wednesday, June 30th, 2021

நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சுகாதார அறிவுறுத்தல்களை மக்கள் சரியாக பின்பற்றத் தவறினால், இன்னும் 10 வாரங்களுக்குள் இலங்கையில் கொரோனா வைரஸின் டெல்டா திரிபு வியாபிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

தொற்றுநோய் வைரஸ் தொடர்பான நிபுணர்களால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக, இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

தற்போது டெல்டா வைரஸ் குறிப்பிட்ட சிலரிடம் மாத்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை நாட்டில் நடமாட்டத்தடை நீக்கப்பட்டாலும், இன்னும் முழுமையாக நாடு திறக்கப்படவில்லை. மக்கள் ஒன்று கூடுவதற்கும், விருந்துபசாரம் உள்ளிட்ட நிகழ்வுகளை நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மாகாணங்களுக்கு இடையிலான பயணங்களுக்கு தடை நிலவுகிறது.

இந்தநிலையில் மக்கள் மிகவும் அத்தியாவசிய தேவைகளுக்காக அன்றி வீணாக வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும். அல்லாத பட்சத்தில் டெல்டா திரிபு மிக வேகமாக இலங்கை முழுவதும் பரவக்கூடும் என்றும் எச்சரித்துள்ள இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே இந்த வைரஸ் திரிபானது மிகவும் ஆபத்தானது என்று சர்வதேச அளவில் எச்சரிக்கப்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் “60 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் கொவிட் -19 அல்பா வைரஸ் திரிபு தொற்றால் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர் . தடுப்பூசிகளின்போது மூத்த குடிமக்களுக்கு முன்னுரிமை அளிப்பதில் அரசு நடவடிக்கை எடுக்க இதுவே காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பேராசிரியர் நீலிகா மாலவிகே உள்ளிட்ட வல்லுநர்கள் நாட்டில் டெல்டா வைரஸ் திரிபு தொற்று பரவும் ஆபத்து இருப்பதாக எச்சரித்துள்ளனர் என்றும் சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே இலங்கையில் இதுவரை 12 கர்ப்பிணிப் பெண்கள் கொவிட்-19 வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்” என்றும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: