சாதனை படைத்த மட்டக்களப்பு மாணவனை ஜனாதிபதி சந்தித்தார்!
Wednesday, November 2nd, 2016வரலாற்றில் முதற்தடவையாக புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மட்டக்களப்பு நாசிவன்தீவு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் மாணவரான திலீப்குமார் சனூஜன் என்ற மாணவரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்துள்ளார்.
80 ஆண்டுகள் பழமைவாய்ந்த குறித்த பாடசாலை சார்பில் முதல்முறையாக புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி எய்திய திலீப்குமார் சனூஜன் என்ற மாணவனின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி குறித்த மாணவனை சந்தித்துள்ளார்.
இதன்போது திலீப்குமார் சனூஜனுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த ஜனாதிபதி, பரிசில்களையும் வழங்கி வைத்தார்.
பாடசாலை அதிபர் ரி.ஜெயபிரதீபன், வகுப்பாசிரியர் ஏ.மோகன்ராஜ், மற்றும் மாணவனின் பெற்றோர் ஆகியோர் இந்த சந்திப்பில் பங்குபற்றினார்கள்.
இதேவேளை 2016 ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்தோரின் அடைவு மட்டத்தின் அடிப்படையில் தேசிய ரீதியில் முதலாமிடத்தைப் பெற்ற குருணாகல் மாகோ கல்வி வலயத்துக்குரிய கல்கமுவ எரியாவ கனிஷ்ட வித்தியாலய மாணவர்களும் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதியை சந்தித்தனர்.
ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த 19 பாடசாலை மாணவ, மாணவியருக்கு ஜனாதிபதி பாராட்டுக்களைத் தெரிவித்து, பரிசுப் பொருட்களையும் வழங்கிவைத்தார்.
அவர்களுடன் கலந்துரையாடிய ஜனாதிபதி பாடசாலைகளில் நிலவும் குறைபாடுகள் குறித்து கேட்டறிந்து கொண்டதுடன், பாடசாலைக்கு புதிதாக கட்டடமொன்றை தேவையாக உள்ளதென மாணவர்கள் சுட்டிக்காட்டினர்.
கட்டடத்துக்கான செலவு மதிப்பீட்டினை தமக்கு அனுப்புமாறு பாடசாலை அதிபர் ஆர்.எம். திலகரத்னவிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார்.
மாகோ வலயக் கல்விப் பணிப்பாளர் டபிள்யூ.எம். அருணசாந்த, கல்கமுவ கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஆர்.ஏ.எச்.எம்.எஸ். பண்டார உட்பட்டோர் இந்த சந்திப்பில் பங்குபற்றினார்கள்
Related posts:
|
|