நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பில் தொழிற்சங்கங்களின் கருத்துக்கள் பொருளாதார ஸ்திரத்தன்மை குறித்த உபகுழுவில் முன்வைப்பு!

Saturday, December 10th, 2022

நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பில் தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிற்சங்க சம்மேளனங்களின் கருத்துக்கள், முன்மொழிவுகளை பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பிலான குறுகிய கால மற்றும் நடுத்தர கால நிகழ்ச்சித்திட்டங்களை அடையாளம் காணல் பற்றிய தேசிய பேரவையின் உப குழு அண்மையில் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது

குறித்த குழு அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக தலைமையில் அண்மையில் கூடியபோதே இவ்வாறு கருத்துக்கள் பெறப்பட்டன.

மருத்துவ அதிகாரிகள் சங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி இங்கு கருத்துத் தெரிவித்த அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் வைத்தியகலாநிதி ஹரித அளுத்கே குறிப்பிடுகையில், மருந்துகள், உணவு மற்றும் போஷாக்குத் தொடர்பில் பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பான குழுவின் ஊடாக முன்வைக்கப்பட்டுள்ள பெருமளவான பரிந்துரைகளுக்கு ஒத்ததாகவே தமது நிலைப்பாடு இருப்பதாகக் கூறினார்.

அண்மையில் வெளியிடப்பட்ட குடும்ப நலப் பணியகத்தின் தகவல்களுக்கு அமைய இதுவரை போஷனை குறித்த பிரச்சினைகள் மிகவும் குறைவாகக் காணப்பட்ட பொலனறுவை, மாத்தறை, காலி போன்ற பிரதேசங்களில் இந்தப் பிரச்சினை உயர்வடைந்திருப்பதாகச் சுட்டிக்காட்டிய அவர், உரிய ஒழுங்குமுறைப்படுத்தலின் கீழ்  மருந்து கொள்வனவுக்குத் தேவையான 160 பில்லியன் பெறுமதியை 20 பில்லியன் ரூபாவினால் குறைக்க முடியும் என்றார்.

சர்வதேச நாணய நிதியம் போன்ற நிறுவனங்கள் கோரும் ஊழலைக் கட்டுப்படுத்துவது குறித்த முன்மொழிவுகள்  தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டிய தேவை இருப்பதாக ஆய்வக சுகாதார நிபுணர்களின் தொழிற்சங்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய ரவி குமுதேஷ் தெரிவித்தார். மருந்துகள் மற்றும் உபகரணங்களை கொள்வனவு செய்வதில் தேசிய கொள்முதல் ஆணைக்குழுவின் அதிகாரம், அரசியல் தலையீட்டை முறியடிக்கப் போதுமானதாக இல்லையெனவும் குறிப்பிட்டார்.

அரச ஊழியர்களின் ஓய்வுபெரும் வயதை 63 ஆகக் கொண்டு வருவதால், வேலை செய்யத் தயாராக உள்ள மற்றும் வேலை செய்யக்கூடியவர்கள்  விருப்பமின்றி அரசுப் பணியில் இருந்து முன்கூட்டியே ஓய்வு பெறுவதற்கு அனுப்பப்படுகிறார்கள் என்றும், வெளியேறியவர்களுக்கு தனியார் அல்லது வெளிநாட்டு சேவையில் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பத்தை இல்லாமல் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஆசிரியர் வைத்தியகலாநிதி சந்தன தர்மரத்ன தெரிவித்தார்

வைத்திய தொழில்துறையினரின் விசேடமாக விசேட வைத்திய நிபுணர்களின் ஓய்வுபெறும் வயது தொடர்பான சிக்கல்களுக்கு விரைவில் தீர்வுகாணப்பட வேண்டும் என உப குழுவின் தலைவர் தெரிவித்தார்.

ஊட்டச்சத்து தொடர்பாக குடும்ப நலப் பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் தகவல்களுக்கு அமைய, 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 50% ஊட்டச்சத்து குறைபாடு உள்ளதாகவும், கர்ப்பிணித் தாய்மார்களின் உடல் நிறை குறியீட்டெண் வெகுவாகக் குறைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் குடும்ப சுகாதாரப் பணியாளர்கள் மட்டத்தில் முன்னுரிமைகள் இனங்காணப்பட்டு இது தொடர்பான தீர்வுகள் காணப்பட வேண்டும் என இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், உபகுழுவின் முதலாவது அறிக்கையில் மின்சாரப் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு முன்னுரிமை பட்டியல் தயாரிப்பது தொடர்பான முன்மொழிவொன்றை முன்வைத்திருப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக தெரிவித்தார்.

மத்திய வங்கியினால் எடுக்கப்பட்ட தீர்மானங்களைக் குறைத்து மதிப்பிடும் வகையில் மேற்கொள்ளப்பட்ட அரசியல் முடிவுகள் காரணமாக மோசமான பொருளாதாரப் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும், அரசாங்க வங்கிக் கட்டமைப்பின் ஊடாக அரசாங்க நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கடன்களை மீள வசூலிப்பதற்கான திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வில்லையென நிதித் துறையின் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

சுமார் 80% பெண்கள் ஆடைத் தொழிலில் துறையில் வேலை செய்கிறார்கள் என்றும், இந்தத் தொழில்துஐறயில் பலர் வறுமையான சூழலுக்கு முகங்கொடுப்பதாகவும் இங்கு புலப்பட்டது. இலங்கையுடன் வர்த்தகம் செய்வது ஆபத்தானது என வெளிநாட்டு வங்கிகள் கூட தீர்மானித்துள்ளதாக பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பான உபகுழுவின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டார். எனவே, சம்பந்தப்பட்ட பெரிய நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களை வெளிநாடுகளுக்கு மாற்ற முடிவு செய்தாலும், தங்கள் செலவைக் குறைப்பதில் கவனம் செலுத்தும் அந்நிறுவனங்கள் வறுமையில் வாடும் தமது தொழிலாளர்களை உடன் அழைத்துச் செல்லாவது, வெளிநாட்டுப் பணியாளர்களை சேவையில் அமர்த்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts: