கொழும்புத்துறைமுக நகரத்தின் தனித்துவமான வாய்ப்புக்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள் – அனைத்து நாடுகளின் அரச தலைவர்களுக்கும் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச அழைப்பு!

Monday, June 7th, 2021

கொழும்புத்துறைமுக நகரத்தினால் வழங்கப்படும் தனித்துவமான வாய்ப்புக்களையும் சேவைகளையும் பயன்படுத்திக்கொள்ளுமாறும், அங்கு முதலீடு செய்வதற்கு முன்வருமாறும் அனைத்து உலகத்தலைவர்களுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கை மூதலீட்டுப் பேரவையின் 2021 ஆம் ஆண்டிற்கான மாநாடு இன்று திங்கட்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் உத்தியோகபூர்வமான ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இன்று 7 ஆம் திகதிமுதல் நாளையதினம் 8 ஆம் திகதி,  நாளைமறுதியம் 9 ஆம் திகதி ஆகிய தினங்களில் நடைபெறும் இந்த இணையவழி மாநாட்டில் உலகளாவிய ரீதியில் 65 நாடுகள் கலந்துகொள்கின்றன.

குறித்த மாநாட்டை இணையவழியில் ஆரம்பித்துவைத்து, உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும் –

இலங்கையினால் பல்வேறு துறைகள் சார்ந்தும் வழங்கப்படும் முதலீட்டு வாய்ப்புக்கள் தொடர்பில் தெளிவுபடுத்தக்கூடிய முக்கிய நிகழ்வாக இந்த மாநாடு அமைவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி இந்த மாநாட்டின் மூலம் இலங்கை முதலீட்டுச்சபை, இலங்கை வர்த்தகப் பேரவை, கொழும்பு பங்குச்சந்தை ஆகியவை மாத்திரமன்றி, முக்கிய கொள்கை வகுப்பாளர்கள், முதலீட்டாளர்கள், வர்த்தக சமூகத்தினர் என அனைவரும் ஒன்றிணைந்திருக்கின்றார்கள். இது எமது பொருளாதாரத்தின் முதலீட்டு நிலவரம் தொடர்பான கலந்துரையாடல்களை ஏற்படுத்துவதற்கும் முதலீட்டு வாய்ப்புக்களை அடையாளங்காண்பதற்கும் வழிவகுத்துள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதுமாத்திரமன்றி மூலதனச்சந்தை மற்றும் கடன்சந்தை ஆகியவை தொடர்பில் ஆராய்வதற்கும் வாய்ப்பேற்படுத்தியுள்ளதாகவும் இலங்கைக்கு மிகவும் அவசியமானதும் பொருத்தமானதுமான சந்தர்ப்பத்திலேயே இந்த முதலீட்டு மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் 2030 ஆம் ஆண்டாகும் போது இலங்கை தற்போதைய அதன் வருமானத்தை விடவும் இருமடங்கு வருமானத்தைப் பெறுவதற்கும் பொருளாதார ரீதியில் புதியதொரு மறுசீரமைப்பை அடைந்துகொள்வதற்கும் அவசியமான செயற்திட்டங்களையும் யோசனைகளையும் எனது அரசாங்கம் கொண்டிருக்கிறது.

எமது நாட்டின் தனித்துவமான கேந்திர முக்கியத்துவமுடைய அமைவிடம், அரசியல் உறுப்பாடு, வலுவாக சமுதாயக்கட்டமைப்பு, அறிவுடையதும் செயற்திறன் வாய்ந்ததுமான தொழிற்படை மற்றும் உயர்வாழ்க்கைத்தரம் ஆகியவை தற்போதைய இலங்கையின் சக்திவாய்ந்த கூறுகளாகும்.

எனவே பொருளாதார மேம்பாடு தொடர்பான எமது எதிர்கால இலக்குகளை அடைந்து கொள்வதற்கு இந்த அடிப்படைக்கூறுகளைப் பயன்படுத்துவதற்கு எதிர்பார்க்கின்றோம். அதுமாத்திரமன்றி நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகளில் தொடர்ச்சியாக முன்னேற்றகரமான மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நிலையான நுண்பாகப் பொருளாதாரக் கட்டமைப்பிற்குள் நிலைபேறானதும் வலுவானதுமான கொள்கைகளைப் பேணுவதற்கான உறுதிப்பாட்டை நாம் கொண்டிருக்கின்றோம்.

அதேவேளை முதலீட்டாளர்களுக்கான பாதுகாப்பு மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை உறுதி செய்வதற்கு உதவும் வகையில் எமது சட்ட மற்றும் ஒழுங்குபடுத்தல் செயற்திட்டங்கள் வகுக்கப்படும் என்றும் குறிப்பிட்டள்ளார்.

அத்துடன் தெற்காசியப்பிராந்திய நாடுகள் அனைத்துடனும் நெருக்கமான பிணைப்பைக் கொண்ட நாடாகவும் இலங்கை இருக்கின்றது. உலகிலேயே மிகவேகமான வளர்ச்சியடைந்து வருகின்ற இந்தப் பிராந்தியத்தின் பிரதானமான சேவை வழங்கும் மத்திய நிலையமாகத் துறைமுகநகரத்தை மாற்றியமைப்பதே எமது இலக்காகும்.

உலகளாவிய ரீதியிலுள்ள சுற்றுலாப்பயணிகளின் விருப்பத்திற்குரிய இடமாகவும் இலங்கை இருந்து வருகின்றது. எனினும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சுற்றுலாத்துறை செயற்பாடுகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருந்தாலும், அதனை மீட்டெடுப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை இலங்கை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றது.

அதுமாத்திரமன்றி தற்போது பூகோள ரீதியில் எழுச்சியடைந்துவரும் ‘மருத்துவ சுற்றுலா’ மூலமும் இலங்கை பயனடைய முடியும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: